டி.என்.பாளையம் அருகே ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் எடுக்க அனுமதிக்கக்கூடாது, பொதுமக்கள் கோரிக்கை மனு


டி.என்.பாளையம் அருகே ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் எடுக்க அனுமதிக்கக்கூடாது, பொதுமக்கள் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 17 Sep 2018 10:15 PM GMT (Updated: 17 Sep 2018 8:03 PM GMT)

டி.என்.பாளையம் அருகே ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் எடுக்க அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஈரோடு,

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

கோபிசெட்டிபாளையம் தாலுகா டி.என்.பாளையம் அருகே கொங்கர்பாளையம் வினோபாநகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-

எங்கள் பகுதியில் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். வாணிப்புத்தூர், கொங்கர்பாளையம், கவுண்டம்பாளையம், அரக்கன்கோட்டை ஆகிய பகுதிகளின் குடிநீர் தேவைக்காக வினோபாநகரில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமாக தண்ணீர் எடுத்து வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் சிலர் ஆழ்துளை கிணறு அமைத்து 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு ராட்சத குழாய் மூலமாக தண்ணீர் எடுத்து செல்கிறார்கள். ஏற்கனவே அரசு சார்பில் குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் சார்பில் தண்ணீர் எடுக்கப்பட்டால் எங்கள் பகுதி வறட்சியாக மாறிவிடும். எனவே எங்கள் பகுதியில் தனியார் சார்பில் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் எடுக்க அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறிஇருந்தனர்.

ஈரோடு வரி செலுத்துவோர் சங்கம், அனைத்து தொழில் வணிக சங்கங்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

தமிழக அரசு அறிவித்துள்ள சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குப்பை வரி என்ற புதிய வரியை சொத்து வரியோடு சேர்த்து வசூலிப்பதை கைவிட வேண்டும். ஏற்கனவே வணிக பயன்பாட்டில் உள்ள கட்டிடங்களை, குடியிருப்பாக மாற்றிஇருந்தால் குடியிருப்புக்குரிய வரியாக குறைத்து விதிக்க கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில துணைத்தலைவர் ஜெயராமன் தலைமையில் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-

ஈரோடு வெண்டிபாளையம், கோணவாய்க்கால், காசிபாளையம், வைராபாளையம் ஆகிய பகுதிகளில் நாங்கள் சாலையோரமாக வசித்து வருகிறோம். எங்களுக்கு அவல்பூந்துறை, மொடக்குறிச்சி ஆகிய பகுதிகளில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு அளவீடு பணிகள் மேற்கொள்ளாததால் நாங்கள் குடியேற முடிவதில்லை. எனவே வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட பகுதியில் அளவீடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளிடம் சென்று கேட்டால் தகாத வார்த்தையில் பேசி மிரட்டுகிறார்கள். எனவே அந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறிஇருந்தனர்.

தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு சங்க மாநில தலைவர் ஜார்ஜ் வில்லியம் என்பவர் கோரிக்கை மனு கொடுக்க நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில், தனக்கு அரசு சார்பில் கொடுத்த நிலத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதால், அந்த ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

அதன்பின்னர் ஜார்ஜ் வில்லியம் அங்கிருந்த ஒரு அதிகாரியிடம், எனது கோரிக்கையை நிறைவேற்றி தரவில்லை என்றால் தற்கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறினார். இதுகுறித்து அந்த அதிகாரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து ஜார்ஜ் வில்லியத்தை போலீசார் மோட்டார் சைக்கிளில் ஏற்றி சூரம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி, அருள்குமார், பூபதி ஆகியோர் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-

கணக்கம்பாளையத்தில் திம்மராய பெருமாள் கோவில் உள்ளது. எங்களது குடும்பத்திற்கு சொந்தமான இந்த கோவில் நிலத்தை தர்மகர்த்தாவாக இருந்தவர் சிலரிடம் அடமானம் வைத்தார். இந்தநிலையில் கோவிலில் இருந்த பல பொருட்கள் மாயமாகிவிட்டது. இதுதொடர்பாக பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், எங்களுக்கு சொந்தமான கோவில் நிலத்தையும் மீட்டு தர வேண்டும். இதேபோல் கோவிலில் பழமை வாய்ந்த சிலைகள் உள்ளது. அந்த சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறிஇருந்தனர்.

பெருந்துறை அருகே வெ.மேட்டுப்பாளையம் லட்சுமிபுரம் காலனியை சேர்ந்த பழனிசாமி- கோகிலா தம்பதி கொடுத்த மனுவில், “நாங்கள் துணி தைக்கும் கடை வைக்க தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்களுக்கு கடனுதவி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கூறி இருந்தனர்.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 228 மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் கதிரவன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

கூட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் பிரபாவதி உள்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story