எச்.ராஜாவை கண்டித்து சேலத்தில், அறநிலையத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


எச்.ராஜாவை கண்டித்து சேலத்தில், அறநிலையத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Sep 2018 11:15 PM GMT (Updated: 18 Sep 2018 10:30 PM GMT)

பா.ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து சேலத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் வீட்டு பெண்களை, பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு அறநிலையத்துறையில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து சேலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று பணிகளை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அறநிலையத்துறை சங்கத்தின் சேலம் மண்டல தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார். இதில் பெண் அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, தரக்குறைவாக பேசிய எச்.ராஜாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை சங்கத்தின் சேலம் மண்டல தலைவர் உதயகுமார் கூறுகையில், பா.ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் அவர், அறநிலையத்துறை அதிகாரிகள் வீட்டுப்பெண்களை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். இது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அலுவலக பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனை தொடர்ந்து வருகிற 27-ந் தேதி சென்னையில் எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

இந்த நிலையில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் சார்பில் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story