கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: வினாடிக்கு 1,100 கன அடி வருகிறது


கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: வினாடிக்கு 1,100 கன அடி வருகிறது
x
தினத்தந்தி 19 Sep 2018 11:00 PM GMT (Updated: 19 Sep 2018 9:13 PM GMT)

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 1,100 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவு கடந்த சில நாட்களுக்கு முன்பு 28 கன அடியாக குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வரும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 459 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்து காணப்பட்டது.

அதன்படி வினாடிக்கு 1,100 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் தற்போது 37.10 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 530 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதே போல் கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் தற்போது 42.48 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,016 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,280 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது

Next Story