கொடுங்கையூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் செல்போன்கள், ரூ.1½ லட்சம் திருட்டு


கொடுங்கையூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் செல்போன்கள், ரூ.1½ லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 19 Sep 2018 11:12 PM GMT (Updated: 19 Sep 2018 11:12 PM GMT)

கொடுங்கையூரில், செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் ரூ.1½ லட்சத்தை திருடிச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி, சர்மா நகர் மார்க்கெட் அண்ணா சாலையை சேர்ந்தவர் அருள் பாக்யராஜ் (வயது 40). தே.மு.தி.க.வில் மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இவர், வியாசர்பாடியில் செல்போன் கடை வைத்து உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடுங்கையூர் காமராஜர் சாலையில் புதிதாக ஒரு செல்போன் கடையை தொடங்கினார். இங்கு 2 பேர் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் கடையின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது கடையில் விற்பனைக்காக வைத்து இருந்த விலை உயர்ந்த செல்போன்கள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கடை உரிமையாளர் அருள் பாக்யராஜ்க்கு தகவல் தெரிவித்தனர்.

இதுபற்றி அவர் கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி, எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, பத்மாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

இந்த செல்போன் கடைக்கு முன்பக்கம் மற்றும் பக்கவாட்டில் என 2 வாசல்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள், கடையின் முன்பக்க வாசலில் உள்ள இரும்பு ஷட்டர் கதவை கடப்பாரையால் நெம்பி திறக்க முயன்று உள்ளனர். ஆனால் முடியாததால் பக்கவாட்டில் உள்ள வாசல் இரும்பு ஷட்டரில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர்.

பின்னர் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1½ லட்சம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டது தெரியவந்தது.

சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. அந்த கடையில் இன்னும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. அதே காமராஜர் சாலையின் எதிரே சினிமா தியேட்டர் இயங்கி வருகிறது. அந்த சினிமா தியேட்டரின் வெளியே ஒரு கண்காணிப்பு கேமரா உள்ளது. ஆனால் அது செயல்படாமல் உள்ளதாக தெரிகிறது.

இதனால் கொள்ளையர்களின் உருவத்தை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story