வாலிபர் கொலை வழக்கில் தந்தை-3 மகன்களுக்கு ஆயுள் தண்டனை


வாலிபர் கொலை வழக்கில் தந்தை-3 மகன்களுக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 20 Sep 2018 9:30 PM GMT (Updated: 20 Sep 2018 6:58 PM GMT)

வாலிபர் கொலை வழக்கில் தந்தை-3 மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அத்திமூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மகன் பாபு (வயது 23). இவர், அந்த பகுதியில் உள்ள அவரது சித்தி இந்திரா (35) என்பவர் வீட்டில் தங்கி வசித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (63). இவருக்கும், பாபுவிற்கும் அந்த பகுதியில் தனித்தனியாக இடம் உள்ளது. இவர்களது இடத்தின் அருகில் ஆறு உள்ளது.

இந்த ஆற்றில் மணல் எடுப்பது தொடர்பாக பாபுவிற்கும், செல்வராஜுக்கும் இடையே முன்விரோத தகராறு இருந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி அத்திமூர் பகுதியில் பாபுவிற்கும், செல்வராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து செல்வராஜ், அவரது மனைவி குள்ளம்மாள் (55). இவர்களது மகன்கள் சரவணன் (35), ஏழுமலை (33), பழனி (31) ஆகியோர் சேர்ந்து பாபுவை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜ், குள்ளம்மாள், சரவணன், ஏழுமலை, பழனி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி மகிழேந்தி தீர்ப்பு கூறினார். அதில் செல்வராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும், சரவணன், ஏழுமலை, பழனி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், குள்ளம்மாளிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

இதையடுத்து போலீசார் அவர்களை வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். 

Next Story