புகையிலை பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு ‘சீல்’


புகையிலை பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 20 Sep 2018 9:30 PM GMT (Updated: 20 Sep 2018 7:32 PM GMT)

திருவண்ணாமலையில் புகையிலை பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருவண்ணாமலை,


திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மீதும், விற்பனை நிலைய உரிமமும் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி எச்சரித்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில், 3 குழுவினர் திருவண்ணாமலை நகர பகுதியில் புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று திடீரென ஆய்வு நடத்தினர்.
அப்போது திருவண்ணாமலை பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு கடையிலும், பஜார் பகுதியில் 2 கடைகளிலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும் திருவண்ணாமலை பஜாரில் சிவன் படத் தெருவில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த புகையிலை பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அந்த குடோனிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.52 ஆயிரம் ஆகும்.

இதுபோன்ற ஆய்வு அடிக்கடி நடைபெறும். ஆய்வின்போது புகையிலை, குட்கா விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் தெரிவித்தார். 

Next Story