குரோம்பேட்டை அருகே வீட்டில் பதுக்கி வைத்த ரூ.25 லட்சம் குட்கா பறிமுதல் அண்ணன்-தம்பி கைது


குரோம்பேட்டை அருகே வீட்டில் பதுக்கி வைத்த ரூ.25 லட்சம் குட்கா பறிமுதல் அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 21 Sep 2018 10:00 PM GMT (Updated: 21 Sep 2018 7:10 PM GMT)

குரோம்பேட்டை அருகே வாடகைக்கு வீடு எடுத்து குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்ற அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தாம்பரம்,

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட் களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்ட போதிலும், சென்னை புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை நடைபெற்று வருகிறது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் குட்கா விற்பனை கடைகளில் அடையாறு துணை கமிஷனர் சேஷாங்சாய் தலைமையிலான தனிப்படையினர் தீவிர சோதனை நடத்தினர்். அப்போது குட்கா விற்பனை செய்பவர்கள் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசுந்தரம் மற்றும் போலீசார் சென்னையை அடுத்த சிட்லபாக்கம் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள நெமிலிச்சேரி ஆர்.கே.நகர் நர்மதா தெருவில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.


அப்போது பெங்களூருவில் இருந்து காஞ்சீபுரம் வழியாக சென்னை கோயம்பேட்டிற்கு கன்டெய்னர் வேன்களில் கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த வீட்டில் இருந்த முத்துராஜ்(வயது 31), அவருடைய சகோதரர் முத்துசுதாகர்(26) ஆகிய 2 பேரை பிடித்து சிட்லபாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த வீட்டில் பதுக்கி வைத்து இருந்த குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களும் 3 வாகனங்களில் ஏற்றி சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அந்த வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட அண்ணன்-தம்பி இருவரிடமும் சிட்லபாக்கம் போலீசார் விசாரித்தனர். அதில், நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்த இருவரும் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல பாத்திர கடையில் வேலை பார்த்து வந்தனர்.

அதன் பின்னர் சென்னை குரோம்பேட்டை அருகில் உள்ள நெமிலிச்சேரிக்கு வந்து இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் கேன்கள் வினியோகம் செய்யும் தொழில் செய்து வந்தனர்.

ஆனால் அதில் போதிய லாபம் இல்லாததால் நண்பர் ஒருவர் மூலம் குட்கா விற்பனையை தொடங்கி உள்ளனர். பெங்களூரில் இருந்து இவற்றை வாங்கி வந்து, இந்த வீட்டில் பதுக்கி வைத்து, தண்ணீர் கேன்கள் வினியோகம் செய்யும் வாகனங்களில் தண்ணீர் கேன்களுடன் குட்கா பொருட்களையும் மறைமுகமாக ஏற்றிச்சென்று கடைகளில் வினியோகம் செய்து வந்தது தெரிந்தது.

சுமார் 2 வருடங்களாக சிட்லபாக்கம் போலீஸ் எல்லையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் குட்கா விற்பனை தொழிலை செய்து வந்துள்ளனர். தற்போது குட்கா விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டு உள்ளதால் அதிக விலைக்கு விற்று நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தில் அதிகளவு குட்கா பொருட்களை வாங்கி ரகசிய விற்பனை செய்து வந்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராஜ் மற்றும் அவரது சகோதரர் முத்துசுதாகர் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் போலீசுக்கு தகவல் கொடுக்காமல் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலில் தனிப்படையினர் அதிரடி சோதனை நடத்தி வீட்டில் பதுக்கிய குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட் களை பறிமுதல் செய்த சம்பவம் சிட்லபாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story