உடுமலை, குடிமங்கலம் பகுதியில் மின்தடையால் ஓ.இ. மில்களில் நூல் உற்பத்தி கடும் பாதிப்பு


உடுமலை, குடிமங்கலம் பகுதியில் மின்தடையால் ஓ.இ. மில்களில் நூல் உற்பத்தி கடும் பாதிப்பு
x
தினத்தந்தி 21 Sep 2018 11:00 PM GMT (Updated: 21 Sep 2018 8:06 PM GMT)

உடுமலை, குடிமங்கலம் பகுதியில் மின்தடையால் ஓ.இ. மில்களில் நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளன.

குடிமங்கலம்,

திருப்பூர் மாவட்டத்தில் பருத்தி சாகுபடி பிரதான தொழிலாக இருந்தது. இதன்காரணமாக நூற்பாலைகளும், அதை சார்ந்த மில்களும் இயங்கி வந்தன. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் மொத்த பருத்தி விற்பனை மற்றும் கொள்முதல் கூடாரமாக திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் திகழ்ந்தது.

பருத்தியில் இருந்து கிடைக்கும் பஞ்சை மூலப்பொருளாக கொண்டு நூல்களை தயாரிக்கும் நூற்பாலைகள் உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில் அதிக அளவில் இருந்தன. இந்த நிலையில் ஆண்டுதோறும் பருத்தி சாகுபடி படிப்படியாக குறைந்ததாலும், பஞ்சு உற்பத்தி குறைந்ததாலும் நூற்பாலைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டன.

தற்போது உடுமலை, குடிமங்கலம் பகுதியில் இயங்கும் ஓப்பன் எண்ட்வித் (ஓ.இ.) மில்கள் மின்தடை, தொழிலாளர்கள் தட்டுப்பாடு பிரச்சினை காரணமாக முழுமையான உற்பத்தியை எட்ட முடியாமல் திணறிவருகின்றனர். கழிவுபஞ்சில் லே–கவுண்ட் நூல் தயாரிக்கும் 25–க்கும் மேற்பட்ட ஓ.இ. மில்கள் மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன.

தற்போது உடுமலை, குடிமங்கலம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க குடிமங்கலம் பகுதியில் உள்ள ஓ.இ. மில்களுக்கு தொழில் நுட்பம் தெரிந்த தொழிலாளர்கள் போதுமான அளவு கிடைப்பதில்லை. இதனால் வெளிமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் பணி நடக்கிறது. மேலும் நூல் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் நூற்பாலைகளை மிகவும் பாதித்துள்ளன.

இதுபற்றி ஓ.இ. மில் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:–

குடிமங்கலம் பகுதியில் கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரித்து கொடுக்கும் ஓ.இ. மில்கள் உள்ளன. இங்கு பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். மில்களுக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் நூல்கள் அனைத்தும் அறுந்து விடுகின்றன. மீண்டும் எந்திரங்களை இயக்க 1 மணி நேரம் ஆகிறது.

இதுமட்டுமின்றி கழிவு பஞ்சு ஒரு கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்துள்ளது. ஆனால் நூல் ஒரு கிலோவுக்கு ரூ.1 மட்டுமே உயர்ந்துள்ளது. மேலும் நூற்பாலைகளில் இருந்து கிடைக்கும் கழிவு பஞ்சுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து கழிவு பஞ்சுகள் பெறவேண்டிய நிலை உள்ளது. இதனால் ஓ.இ. மில்களில் நூல் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மின்தடை நூல்விலை குறைவு, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் ஓ.இ. மில்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story