போலீஸ் நிலையம் முன்பு பெண் தற்கொலை: கைதான டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்


போலீஸ் நிலையம் முன்பு பெண் தற்கொலை: கைதான டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 21 Sep 2018 11:00 PM GMT (Updated: 21 Sep 2018 9:44 PM GMT)

குமாரபாளையம் போலீஸ் நிலையம் முன்பு பெண் தீக்குளித்து தற்கொலை செய்த வழக்கில் டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

குமாரபாளையம்,

கோவை பீளமேடு பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் சேகர். இவரது மனைவி பார்வதி (வயது 46). இவர்களிடம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (44) கார் டிரைவராக வேலை பார்்த்து வந்தார். அப்போது பார்வதிக்கும், கார் டிரைவர் ஈஸ்வரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த சேகர் மனைவியிடம் தகராறு செய்து பிரிந்து சென்று விட்டார். இதனால் பார்வதி கோவையில் உள்ள சொத்துக்களை விற்றுவிட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சடையம்பாளையம் காந்தி நகரில் வாடகை வீட்டில் குடியேறினார்.

அப்போது பார்வதியிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சம் பணத்தை ஈஸ்வரன் வாங்கினார். பின்னர் அவர் வீட்டுக்கு வராததால் பார்வதி பணத்தை திருப்பி கேட்டார். அவர் தர மறுத்ததால் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். முன்னதாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பார்வதியிடம் ஈரோடு 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வாக்குமூலம் பெற்றார்.

அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஈஸ்வரன், அவருடைய மனைவி மலர்கொடி, ஈஸ்வரனின் அண்ணன் ஜம்பு மற்றும் நண்பர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக, ஈஸ்வரனை நேற்று மாலை குமாரபாளையத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். போலீசாரிடம் ஈஸ்வரன் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனக்கும், பார்வதிக்கும் கடந்த சில ஆண்டுகளாக பழக்கம் இருந்தது உண்மை. அந்த பழக்கத்தின் அடிப்படையில் அவளை கற்பழித்து உள்ளேன். ஆனால் பார்வதியிடமிருந்து பணம் ஏதும் பெறவில்லை. அவள் கொடுத்த பணத்திற்கு சுமார் 34 சென்ட் நிலம் வாங்கி கொடுத்து உள்ளேன். அந்த நிலத்தை அவரது மகன் பெயரில் பதிவு செய்து உள்ளார். மற்றபடி அவளது பணத்தை பெற்று ஏமாற்றவில்லை. இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story