வெளிமாநிலங்களில் இருந்து தேனிக்கு புகையிலை பொருட்கள் கடத்தல் அதிகரிப்பு


வெளிமாநிலங்களில் இருந்து தேனிக்கு புகையிலை பொருட்கள் கடத்தல் அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 Sep 2018 11:00 PM GMT (Updated: 22 Sep 2018 8:15 PM GMT)

வெளிமாநிலங்களில் இருந்து தேனி மாவட்டத்துக்கு புகையிலை பொருட்கள், போதை பொருட்கள் அதிக அளவில் கடத்தி வரப்படுகிறது. ஆனால், சோதனை சாவடிகளில் கண்டு கொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேனி,

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தேனி மாவட்டத்தில் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகள் அருகில் உள்ள கடைகளிலும், பஸ் நிலையங்கள், கிராமப்புற பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களிலும் புகையிலை பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளோ, போலீசாரோ நடவடிக்கை எடுத்தாலும் மீண்டும், மீண்டும் விற்பனை நடந்த வண்ணம் உள்ளன. விற்பனை களை கட்டுவதால் வெளி மாநிலங்களில் இருந்து இவற்றை தேனி மாவட்டத்துக்கு கடத்தி வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. தேனி மற்றும் கம்பத்தை மையப்படுத்தியே மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் மொத்த விற்பனை நடப்பதாக கூறப்படுகிறது.

தேனி, கம்பம் பகுதிகளில் குடோன்களிலும், வீடுகளிலும் சிலர் பதுக்கி வைத்து, அவற்றை சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். புகையிலை பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கடைகளில் கிடைப்பதால் இவற்றை பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து அதே பழக்கத்தை தொடர்கின்றனர். தேனி அருகே வடபுதுப்பட்டியில் சமீபத்தில் ஒரு வீட்டில் இருந்து சுமார் 480 கிலோ புகையிலை பொருட்கள் பிடிபட்டது. அதேபோல் மாவட்டத்தின் பல இடங்களிலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக கடந்த 6 மாதங்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், தாராளமாக விற்பனை நடந்து வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து தங்கு தடையின்றி புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா போன்றவை தேனி மாவட்டத்துக்கு கடத்தி வரப்படுவது தொடர்வதே இதற்கு முக்கிய காரணம் என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் போலீஸ் துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்ட போதிலும் அவற்றில் வாகன தணிக்கை முறையாக செய்யப்படுவது இல்லை. பெயரளவில்தான் அவை செயல்படுகின்றன. குறிப்பாக பெங்களூரு, ஆந்திரா பகுதிகளில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள், தனியார் சொகுசு பஸ்களை சோதனை செய்வது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இதுபோன்ற வாகனங்களில் கடத்தி வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சோதனைகளை தீவிரப்படுத்தி, கடத்தலை தடுத்தால் மட்டுமே விற்பனையை தடுக்க முடியும் என்ற நிலைமை உள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட போலீஸ் துறை செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story