வைகை அணை நீர்மட்டம் 58.5 அடியாக குறைந்தது


வைகை அணை நீர்மட்டம் 58.5 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 22 Sep 2018 11:15 PM GMT (Updated: 22 Sep 2018 8:22 PM GMT)

வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 58.5 அடியாக குறைந்துள்ளது.

ஆண்டிப்பட்டி,

பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் கூடுதலான தண்ணீர் திறக்கப்பட்டதால், வைகை அணையின் நீர்மட்டம் 58.5 அடியாக குறைந்துள்ளது.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த மாதம் முழு கொள்ளளவான 69 அடியை எட்டியது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து மதுரை, மேலூர், திருமங்கலம் பகுதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. எனினும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தே காணப்பட்டது. இதன்காரணமாக 20 நாட்களுக்கும் மேலாக வைகை அணை நீர்மட்டம் முழு கொள்ளளவிலேயே நீடித்தது.

இதற்கிடையே சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை ஆற்றில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்படி கடந்த 15 நாட்களில் 1,860 மில்லியன் கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. பாசனத்திற்கும், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்கும் சேர்த்து கூடுதலான தண்ணீர் திறக்கப்பட்டதால், வைகை அணை நீர்மட்டம் கிடுகிடுவென குறையத் தொடங்கியது. தொடர் நீர்திறப்பால் கடந்த 10 நாட்களில் மட்டும் வைகை அணையின் நீர்மட்டம் 10.5அடி குறைந்துள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 58.5 அடியாக இருந்தது.

60 அடிக்கும் கீழாக அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், பலநாட்களாக அணையின் பிரதான மதகுகள் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு, தற்போது சிறிய மதகுகளின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டம் மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் வைகை அணைக்கான நீர்வரத்தும் குறைந்து கொண்டே வருகிறது.

அணைக்கு வினாடிக்கு 757 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கும் மதுரை மாநகர குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 1,590 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் மொத்த நீர்இருப்பு 3,324 மில்லியன் கனஅடியாக காணப்பட்டது.


Next Story