திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவன் உடல் மீட்பு


திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவன் உடல் மீட்பு
x
தினத்தந்தி 22 Sep 2018 10:45 PM GMT (Updated: 22 Sep 2018 8:39 PM GMT)

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவன் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் காந்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி நதியா. இவர்களுக்கு சந்துரு, சூர்யா (வயது 9) ஆகிய 2 மகன்கள். சூர்யா 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை சுப்பிரமணியும், நதியாவும் தனது வீட்டிற்கு செல்லும் பாதையான கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள கருவேல மரங்களை வெட்டி அகற்றி கொண்டிருந்தனர். சந்துருவும், சூர்யாவும் ஆற்றுக்கு குளிக்க சென்றனர். இந்தநிலையில் தண்ணீரில் சந்துருவும், சூர்யாவும் அடித்து செல்லப்பட்டனர். அப்போது சந்துருவும், சூர்யாவும் தங்களை காப்பாற்றுமாறு அபய குரல் எழுப்பினர். சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி வேகமாக ஓடி ஆற்றுக்குள் குதித்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த சந்துருவை உடனடியாக மீட்டார். ஆனால் சூர்யாவை மீட்க முடியவில்லை.

இதையடுத்து சந்துருவை மீட்டு கரைக்கு கொண்டு வந்த சுப்பிரமணி தனது மற்றொரு மகன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டான் என்ற தகவலை அக்கம், பக்கத்தினரிடம் தெரிவித்தார். அதன்பேரில் ஓடி வந்த அக்கம், பக்கத்தினரும் ஆற்றுக்குள் குதித்து சூர்யாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கிடைக்கவில்லை. இது குறித்து தகவலறிந்த திருமானூர் போலீசார், அரியலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஆகியோர் வந்து ஆற்றுக்குள் இறங்கி சூர்யாவை தீவிரமாக தேடும் பணியில் இரவு 7 மணி வரை ஈடுபட்டனர். ஆனாலும் கிடைக்கவில்லை. இரவாகி விட்டதால் போதிய வெளிச்சம் இல்லாததால் சூர்யாவை தேடும் பணியை தீயணைப்பு வீரர்கள், போலீசார் நிறுத்திவிட்டனர்.

இதையடுத்து நேற்று காலை அரியலூர் தீயணைப்பு படைவீரர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் சூர்யாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் உள்ளூர் நீச்சல் வீரர்களும் தேடும் பணியில் ஈடுபட்டனர். காலை 8 மணியளவில் சூர்யாவின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் சூர்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சூர்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதை யடுத்து திருமானூர் அனைத்து கட்சியினர் திருமானூர் பஸ் நிலையத்திலிருந்து மவுன ஊர்வலமாக வந்து இறந்த சூர்யா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கொள்ளிடம் நீர்பாதுகாப்பு குழுவினர் கூறுகையில், ஏற்கனவே மணல் குவாரி அமைந்திருந்த இடத்தில் ஆழமாக மணல் எடுத்ததால் கடந்த மாதம் ஆற்றில் வந்த நீர் அந்த பள்ளத்தில் தேங்கி விட்டது. இதனால் அந்த சிறுவன் இறந்து போனான். கடந்த காலத்தில் பலர் இறந்து போனார்கள். உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் கிராம ஊராட்சி சார்பில் ஆபத்ததான பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைத்திருப்பார்கள். அதிக ஆழத்தில் மணல் எடுப்பதால் உயிர் சேதம் ஏற்படுகிறது என்று கூறினார்.

Next Story