திருப்பூரில் பரபரப்பு: திருமணமான 3 மாதத்தில் வி‌ஷம் குடித்து போலீஸ்காரர் தற்கொலை முயற்சி


திருப்பூரில் பரபரப்பு: திருமணமான 3 மாதத்தில் வி‌ஷம் குடித்து போலீஸ்காரர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 22 Sep 2018 11:30 PM GMT (Updated: 22 Sep 2018 10:54 PM GMT)

திருமணமான 3 மாதத்தில் வி‌ஷம் குடித்து போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்,

திருமணமான 3 மாதத்தில் வி‌ஷம் குடித்து போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வி.மேட்டூரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 27). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 7–வது அணியில் கடந்த 2016–ம் ஆண்டு போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். சுரேசுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ரம்யாகிருஷ்ணன்(20) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கடந்த 1 மாதமாக சிறப்பு காவல் படையின் 7–வது அணி திருப்பூர் மாநகரில் காவல் பணிக்கு வந்துள்ளது. ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 90 பேர் கொண்ட அந்த அணி திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட அரங்கில் தங்கியிருக்கிறது. அந்த அணியின் போலீஸ்காரர்கள், மாநகர போலீசாருடன் இணைந்து ரோந்துப்பணி மேற்கொண்டு வருகிறார்கள். அந்த அணியின் எழுத்தராக சுரேஷ் பணியாற்றி வருகிறார்.

திருப்பூரில் பணியில் இருப்பதால் சுரேஷ், திருப்பூர் அய்யன் நகரில் உள்ள தனது சகோதரி ராஜேஸ்வரியின் வீட்டில் தனது மனைவியையும் தங்க வைத்துள்ளார். விடுமுறையின் போது சகோதரியின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சுரேஷ் தனது சகோதரி வீட்டில் இருந்துள்ளார். வெளியில் சென்று வந்த அவர், காலை 6.30 மணி அளவில் தனது மனைவியிடம் வி‌ஷம் குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்சு உதவியுடன் சுரேசை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுரேஷ் எதற்காக வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார் என்பது தெரியவில்லை. குடும்ப பிரச்சினை காரணமா? இல்லை வேலைப்பளு காரணத்தால் இந்த முடிவை எடுத்தாரா? என்பது குறித்து திருப்பூர் மத்திய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பூரில் போலீஸ்காரர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story