சூடானால் உடம்பு கேடாகும்


சூடானால் உடம்பு கேடாகும்
x
தினத்தந்தி 23 Sep 2018 10:19 AM GMT (Updated: 23 Sep 2018 10:19 AM GMT)

சமைக்கும்போது மீதமாகும் உணவு பொருட்களை பிரிட்ஜில் சேமித்து வைத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் வழக்கம் நிறைய வீடுகளில் நடைமுறையில் இருக்கிறது.

மைக்கும்போது மீதமாகும் உணவு பொருட்களை பிரிட்ஜில் சேமித்து வைத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் வழக்கம் நிறைய வீடுகளில் நடைமுறையில் இருக்கிறது. ஒருமுறை சமைத்த உணவு வகைகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது தவறான பழக்கம். அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் வீரியம் இழந்துபோய் விடும். முட்டையை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. முட்டையை அவித்தோ, குழம்பாகவோ, வறுவலாகவோ சமைத்தால் உடனே சாப்பிட்டுவிடவேண்டும். அதனை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் வீணாவதோடு, வயிற்று உபாதைக்கும் வழிவகுத்துவிடும்.

காளான்களில் புரதமும், தாதுக்களும் அதிகம் இருக்கிறது. அவைகளை அதிக சூடாக சமைக்கக் கூடாது. அதுபோல் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவும் கூடாது. அப்படி சாப்பிடுவது செரிமான மண்டலத்திற்கு தீங்கு விளைவித்துவிடும். நிறையபேர் கோழி குழம்பை இரண்டு, மூன்று நாட்கள் சூடுபடுத்தி சாப்பிடுவார்கள். அப்படி செய்யும்போது அதில் டாக்சின் உற்பத்தியாகி விஷத்தன்மை கொண்டதாகிவிடும். அதனால் உடல் உபாதைகளும் ஏற்படக்கூடும்.

சாதத்தை முடிந்த அளவு சூடாக சாப்பிட வேண்டும். சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும். கீரை வகைகளையும் திரும்பவும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. அதில் நைட்ரேட் அதிகம் இருக்கிறது. மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும்போது நைட்ரேட் அதிகரித்து நச்சுத்தன்மை உடையதாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

கொத்தமல்லி தழை, தக்காளிப்பழம் சேர்க்கப்பட்ட குழம்பு வகைகளையும் மறுபடியும் சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகளையும் மீண்டும் சூடுபடுத்தி பயன் படுத்தக்கூடாது. அப்படி செய்தால் எண்ணெய்யில் இருந்து வெளியேறும் வாயுக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

Next Story