திருமுல்லைவாயலில் போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


திருமுல்லைவாயலில் போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 Sep 2018 12:11 AM GMT (Updated: 24 Sep 2018 12:11 AM GMT)

திருமுல்லைவாயலில் போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

ஆவடி,

திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் அருண் கோபிநாத் (வயது 26). இவர் ஆவடியில் உள்ள சிறப்பு காவல்படை 5-ம் பட்டாலியனில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரேவதி (23).

இவர்களது சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆகும். 2 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ரேவதி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

நேற்று காலையில் அருண் கோபிநாத் கடைக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ரேவதி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கடையில் இருந்து வீடு திரும்பிய அருண் கோபிநாத், வீட்டில் மனைவி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறினார்.

இதைக்கேட்டு அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர், இது குறித்து திருமுல்லைவாயல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ரேவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ரேவதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் இந்த தற்கொலை குறித்து அம்பத்தூர் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார். போலீஸ்காரரின் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருமுல்லைவாயல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story