தூசி அருகே கட்டிட தொழிலாளி வெட்டிக் கொலை


தூசி அருகே கட்டிட தொழிலாளி வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 24 Sep 2018 10:56 PM GMT (Updated: 24 Sep 2018 10:56 PM GMT)

தூசி அருகே வேலைக்கு சென்ற கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூசி,

காஞ்சீபுரம் மாவட்டம் காரை கிராமம் குட்டை கார தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி (35). இவர்களுக்கு 1 மகள், 1 மகன் உள்ளனர். ராஜாராம் நேற்று முன்தினம் காஞ்சீபுரத்திற்கு வேலைக்கு செல்வதாக மனைவி ஜெயந்தியிடம் தெரிவித்துவிட்டு காலை 8 மணிக்கு புறப்பட்டார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் ஜெயந்தி, கணவர் ராஜாராமை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது ‘ஸ்விட்ச் ஆப்’ என வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணிக்கு வெள்ளாகுளம் கிராமத்தை சேர்ந்த தேவராஜ், போன் செய்து ஜெயந்தியிடம் “உனது கணவர் வெம்பாக்கம் அருகே பில்லாந்தாங்கல் கிராமம் மெயின்ரோட்டில் வெட்டு காயத்துடன் இறந்து கிடக்கிறார்” என்று கூறியுள்ளார். இது குறித்து போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

உடனடியாக தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜாராமின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜெயந்தி தூசி போலீசில் புகார் செய்தார்.

அதில், “எனது கணவரை யாரோ கொலை செய்து உள்ளார்கள். என் கணவரை கொலை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இது குறித்து தூசி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அய்யனார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story