தி.மு.க.-காங்கிரசை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு


தி.மு.க.-காங்கிரசை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு
x
தினத்தந்தி 25 Sep 2018 10:45 PM GMT (Updated: 25 Sep 2018 7:23 PM GMT)

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தி.மு.க., காங்கிரசை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

தர்மபுரி,

இலங்கை தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் சிங்கள ராணுவத்திற்கு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உதவியதன் மூலம் பல ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமான தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் குருநாதன் வரவேற்று பேசினார். நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், ஒன்றியசெயலாளர்கள் சிவப்பிரகாசம், கோவிந்தசாமி, பெரியண்ணன், வேலுமணி, கோபால், குமார், செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அமைப்பு செயலாளர் செம்மலை எம்.எல்.ஏ. தலைமையில் கலைஇலக்கிய அணி இணை செயலாளர் போளூர்ஜெயகோவிந்தன், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பேசுகையில், இலங்கையில் நடந்த இறுதிபோரில் ஏராளமான ஈழத்தமிழர்களும், விடுதலை புலிகள் இயக்கத்தினரும் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கையில் நடந்த போரின்போது மத்தியில் ஆட்சி செய்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அரசு இலங்கை தமிழர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் மூலம் தி.மு.க., காங்கிரஸ் தலைமையிலான அரசு இலங்கையில் தமிழின மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு ஒருவகையில் காரணமாக இருந்தது. இதுதொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் தி.மு.க.-காங்கிரசை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் செம்மலை எம்.எல்.ஏ. பேசுகையில், இலங்கையில் நடந்த இறுதிபோரில் நாங்கள் வெற்றி பெற அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசு உதவியது என்று ராஜபக்சே அண்மையில் கூறி உள்ளார். இதன் மூலம் அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ்- தி.மு.க. தலைமையிலான அரசு இலங்கையில் தமிழின மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தது உறுதியாகிறது. இதுதொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிங்காரம், குப்புசாமி, மாவட்ட பொருளாளர் நல்லத்தம்பி, சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் பழனிசாமி, சுமதி, மோகன், மாநில கூட்டுறவு பணியாளர் சங்க செயலாளர் சின்.அருள்சாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், ராஜேந்திரன், மதிவாணன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் நகர செயலாளர் பூக்கடை ரவி நன்றி கூறினார்.

Next Story