இலங்கையில் இறுதிக்கட்ட போரில் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு தி.மு.க– காங்கிரஸ் தான் காரணம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி


இலங்கையில் இறுதிக்கட்ட போரில் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு தி.மு.க– காங்கிரஸ் தான் காரணம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
x
தினத்தந்தி 25 Sep 2018 11:30 PM GMT (Updated: 25 Sep 2018 7:57 PM GMT)

‘இலங்கையில் இறுதிக்கட்ட போரில் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு தி.மு.க.–காங்கிரஸ் தான் காரணம்’ என்று கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆவேசமாக பேசினார்.

கோவை,

இலங்கையில் ராஜபக்சேவுக்கு உதவிய தி.மு.க–காங்கிரஸ் கட்சியினரை போர் குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் கோவை சிவானந்தா காலனியில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் கோவை புறநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:–

இந்த கூட்டம் அறிவிக்கப்பட்டு 2 நாள் தான் ஆகிறது. இங்கு கூடியுள்ள கூட்டத்தின் மூலம் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கோவை மாவட்டம் என்றைக்குமே அ.திமு.க.வின் கோட்டை தான். இலங்கை தமிழர்களுக்காகவே பேசிக் கொண்டே இருந்த சில கட்சி தலைவர்கள் இன்றைக்கு பேசுவதே இல்லை.

கடந்த வாரம் இந்தியா வந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இலங்கையில் நடைபெற்ற போருக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்த உதவிகளை கூறியிருந்தார். மேலும் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி அரசின் பொருளாதார உதவிகளால் தான் சிங்கள ராணுவம் தமிழர் பகுதிகளை சூறையாடியது என்பதும், பல லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதும், தமிழ் பெண்கள் பல்லாயிரக்கணக்கானோர் கற்பழித்து படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதும் ராஜபக்சே வாயிலாக வெளிவந்து விட்டது. இந்த கொடூர தாக்குதலை மனிதாபிமானமற்ற செயல் என ஐ.நா. சபை உட்பட பல நாடுகள் கண்டித்தது.

ஈழத்தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்திய கொடூர படுகொலைகளுக்கும், தமிழ் பெண்கள் மீது நடத்தப்பட்ட கோரத்தாக்குதலுக்கும், தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி அரசு தான் காரணம். அதற்கு உதவியிருப்பதால் தி.மு.க.–காங்கிரசை மீது போர் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இலங்கை யில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த குற்றத்திற்காக காங்கிரஸ் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும். இதை மத்திய அரசு செய்ய வேண்டும்.

மத்தியில் மந்திரி பதவிக்காகவும், 2006–ல் அமைந்த மைனாரிட்டி தி.மு.க. அரசை காப்பாற்றி கொள்ள வும், ஈழத்தமிழர்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசின் துரோக நடவடிக்கைக்கு தி.மு.க. துணை நின்றதை மறக்க முடியுமா?. அன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் என்று அறிவித்து ஒரு மணி நேரம் நாடகம் நடத்தினார். அந்த நாடகத்தை முடித்து இலங்கை தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, போர் நின்று போனது என்று அறிவித்த பின்னர் பதுங்கு குழியில் இருந்த நம்முடைய அப்பாவி தமிழர்கள், தமிழ் சொந்தங்கள் 50 ஆயிரம் பேர் வெளியே வந்தனர். அவர்களை குண்டு போட்டு அழித்தனர். இதற்கெல்லாம் யார் காரணம், கருணாநிதியும் அப்போதைய துணை முதல்–அமைச்சர் மு.க.ஸ்டாலினும், காங்கிரசும் தான் காரணம். தமிழ் சொந்தங்களை அழித்ததற்கு யார் காரணம் என்று ராஜபக்சே வெளிப்படையாக அறிவித்தார். இது பற்றி மு.கஸ்டாலின் ஏன் பேசவில்லை.

இன்று ஒரு பேப்பரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துறையில் கொடுத்து முதல்–அமைச்சர், துணை முதல்– அமைச்சர் மீது கொடுத்தீர்கள். மூன்றாவதாக தான் என் மீது புகார் கொடுத்தீர்கள். அந்த அளவிற்கு என் மீது பயம். என்னையும், அமைச்சர் தங்கமணி மீதும் ஏன் புகார் சொல்கிறீர்கள் என்று அனைவருக்கும் தெரியும். இன்றைக்கு இந்த கட்சி ஏதோ சூழ்நிலையில் இரண்டாக பிரிந்தது.

நானும், தங்கமணியும் இரு சகோதரர்கள் போன்று செயல்பட்டு இந்த கட்சி சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கிறோம். இந்த ஆட்சியை எப்படியாவது கலைத்து விட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். இந்த ஆட்சி 10 நாளில் போய் விடும். ஒரு மாதத்தில், 2 மாதத்தில் போய்விடும் என்று சொன்னார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒரு ஆண்டை தாண்டி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டல விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். அவர் ஒன்றும் வாரிசு அடிப்படையில் முதல்–அமைச்சர் ஆகிவிடவில்லை. சாதாரண அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து மேலே வந்தவர். டி.டி.வி. தினகரன் போன்று புறவாசல் வழியாக வரவில்லை.

மத்தியில் தி.மு.க. ஆட்சியில் இருந்த போது தமிழகத்துக்காக என்ன செய்தீர்கள். கோவை மாவட்டம் 50 ஆண்டு கால வளர்ச்சியை கண்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள எல்லா சாலைகளும் அகலப் படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திற்காக என்ன திட்டங்கள் கேட்டாலும் முதல்– அமைச்சர் செய்து கொடுக்கிறார். எல்லா திட்டங்களையும் நிறைவேற்றி வருவதால் நாங்கள் தைரியமாக மக்களை சந்தித்து ஒட்டு கேட்போம். எங்களை எதற்காக ராஜினாமா செய்ய சொல்கிறீர்கள்?.

நான் அமைச்சர், அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன். மு.க.ஸ்டாலின் உங்கள் எதிர்க்கட்சி தலைவர் பதவி, தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுங்கள். நீங்கள் சொன்ன குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் என்று சொன்னேன். ஆனால் அதற்கு மு.க.ஸ்டாலின் பதில் சொல்லவில்லை.

தி.மு.க. ஆட்சியில் தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு. அப்போது தமிழகத்தில் தொழில்கள் முடங்கின. தமிழகத்தில் உள்ள தொழில் அதிபர்களுக்கு தி.மு.க. கொடுத்தது மின்வெட்டு மட்டும் தான். ஆனால் மின்வெட்டை சரி செய்தது ஜெயலலிதா அரசு.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.


Next Story