சங்ககிரியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


சங்ககிரியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 Sep 2018 10:30 PM GMT (Updated: 25 Sep 2018 10:25 PM GMT)

சங்ககிரியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஆங்கில மொழிப்பாடம் கற்க கடினமாக இருந்ததால் மனம் உடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சங்ககிரி,

ஆங்கில மொழிப்பாடம் கற்க கடினமாக இருந்ததால் மனம் உடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம், சங்ககிரி முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் குமார்(வயது 44), தச்சு தொழிலாளி. இவருடைய மகள் கீர்த்தனா (19). இவர் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

ஆங்கில மொழிப்பாடங்களை கற்க கடினமாக இருந்ததால் திணறி வந்த மாணவி கீர்த்தனா, இந்த படிப்பு வேண்டாம் என்று சமீபத்தில் தனது தந்தையிடம் கூறி உள்ளார். அதற்கு குமார், இன்னும் ஒரு ஆண்டு தானே பட்டப்படிப்பு உள்ளது, எப்படியாவது படித்து விடு என்று மகளிடம் கூறி உள்ளார். இருப்பினும் ஆங்கில மொழிப்பாடம் கற்க முடியாமல் திணறி வந்த மாணவி மனம் உடைந்து காணப்பட்டார்.

நேற்று முன்தினம் அவர் வீட்டில் தனது அறை கதவை பூட்டி விட்டு துப்பட்டாவால் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனிடையே அவரது அறை கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்காததால், அதை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் கீர்த்தனா மயக்கம் அடைந்து காணப்பட்டார். உடனே அவரை மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் கொண்டு வரும் வழியில் இறந்து விட்டார் என்று கூறினர்.

இந்த சம்பவம் குறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில் சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆங்கில மொழிப்பாடம் கற்க கடினமாக இருந்ததால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் விபரீத முடிவு உறவினர்கள் மற்றும் சக மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



Next Story