சாலையை சீரமைக்க முயன்ற பொதுமக்கள் - ஏற்காடு போலீசார் தடுத்து நிறுத்தினர்


சாலையை சீரமைக்க முயன்ற பொதுமக்கள் - ஏற்காடு போலீசார் தடுத்து நிறுத்தினர்
x
தினத்தந்தி 26 Sep 2018 11:33 PM GMT (Updated: 26 Sep 2018 11:33 PM GMT)

அரசிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, ஏற்காடு அருகே மாரமங்கலம் ஊராட்சியில், சாலையை சீரமைக்க முற்பட்ட 18 கிராம மக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்காடு,

ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் மாரமங்கலம் ஊராட்சியில் கொட்டச்சேடு கிராமம் முதல் செந்திட்டு கிராமம் வரை 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு கரடுமுரடான மண் பாதை உள்ளது. இந்த பாதையின் மூலம், செந்திட்டு, காளிக்காடு, அரங்கம், பெலாக் காடு, சின்ன மதூர், பெரிய மதூர், சின்ன வீட்டு களம், பெரிய வீட்டு களம், கேழையூர், இரங்காடு, கோழிக்கல், சுண்டக்காடு, குட்டமாத்திக்காடு, மாவூத்து, கொம்புதூக்கி, கூத்துமுத்தல், சின்னேரிக்காடு, பாரக்காடு உள்ளிட்ட 18 கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த பாதை அங்குள்ள தனியார் எஸ்டேட் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. கிராம மக்கள் கோர்ட்டை அணுகியதை தொடர்ந்து, கடந்த 2015-ம் ஆண்டு வருவாய்த்துறை சார்பில் ஆக்கிரமிப்பை அகற்றி பாதையை மீட்டனர். பின்னர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மண்பாதையை சீரமைத்து தார்சாலை அமைத்து தரக்கோரி அரசிற்கு பலமுறை இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் மனு அளித்துள்ளனர்.

ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் 18 கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மக்கள் தாங்களாகவே நேற்று காலை முதல் மண்பாதையை சீரமைக்க தொடங்கினர். இது குறித்து தனியார் எஸ்டேட் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில், ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் கிராம மக்கள் சாலையை சீரமைக்கும் இடத்திற்கு வந்து, சாலை அமைக்கக்கூடாது என கூறி தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் போலீசாரிடம் சாலையை சீரமைக்க கோரி முறையிட்டு காரசாரமாக வாக்குவாதம் செய்தனர். மேலும் அவர்கள் போலீசாரிடம் கூறும் போது, ‘இத்தனை ஆண்டுகளாய் உடல்நிலை பாதிக்கப்படும் போதும், கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்படும் போதும், இந்த சாலையை மிகவும் சிரமப்பட்டே கடந்து வருகிறோம். விரைவில் இந்த சாலையை அரசு அமைத்து தராவிட்டால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்‘ என்று கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story