ஆவூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 2 பேர் பலி


ஆவூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 28 Sep 2018 9:51 PM GMT (Updated: 28 Sep 2018 9:51 PM GMT)

ஆவூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ஆவூர்,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, ஆவூர் எஸ்.பி. நகரை சேர்ந்தவர் லெட்சுமணகுமார்(வயது 31). ஆவூர் அருகே உள்ள துரைக் குடியை சேர்ந்தவர் கேசவன் (வயது 43). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்த்து வந்தார். நண்பர்களான 2 பேரும், ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலை காரணமாக மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலத்திற்கு சென்றனர். பின்னர் வேலையை முடித்துவிட்டு 2 பேரும் அதே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

லெட்சுமணகுமார் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். கேசவன் பின்னால் அமர்ந்து வந்தார். ஆவூர் பிடாரம்பட்டி அருகே சாலையில் வந்துகொண்டிருந்தபோது முன்னாள் ஒரு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் டேங்கர் லாரியை முந்திசெல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி 2 பேரும் சாலையில் விழுந்தனர். அப்போது லெட்சுமணகுமார், கேசவன் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் லெட்சுமணகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கேசவன் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். இதையடுத்து லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைப்பார்த்த அவ்வழியே சென்றவர்கள் உயிருக்கு போராடிய கேசவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறிது நேரத்தில் கேசவனும் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் லெட்சுமணகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த டிரைவர் கேசவனுக்கு திருமணமாகி சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த விபத்து குறித்து அறிந்த 2 கிராம மக்களும் சோகத்தில் உள்ளனர்.

Next Story