நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண் குத்திக்கொலை தாய்–தந்தை கைது; தம்பிக்கு வலைவீச்சு

நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாய்– தந்தையை போலீசார் கைது செய்தனர். தம்பியை வலைவீசி தேடி வருகின்றனர்.
உப்புக்கோட்டை,
தேனி அருகே உள்ள கோட்டூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 49). அவருடைய மனைவி பேச்சியம்மாள். இவர்களுடைய மகள் ஜெயமாலா (25). மகன் செல்வக்குமார் (23). இவர், வீரபாண்டி அருகே ஒரு தனியார் மில்லில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் ஜெயமாலாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமு என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பாண்டீஸ்வரன் (5) என்ற மகன் உள்ளான். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயமாலா பிரிந்து தனது தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார். அதன்பிறகு அவர் கூலிவேலைக்கு சென்று வந்தார்.
கணவரை பிரிந்து வாழ்ந்த ஜெயமாலாவின் நடத்தையின் மீது குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன்காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வக்குமார் மற்றும் அவரது பெற்றோர் ஜெயமாலாவை கடப்பாரையால் தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்து போன அவர் கீழே விழுந்தார்.
பின்னர் அவர்கள், ஜெயமாலாவை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடி துடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையா, பேச்சியம்மாள் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள செல்வக்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.






