யோகாசனத்தில் சிறுவன் சாதனை
யோகாசனத்தில் சிறுவன் சாதனை படைத்து உள்ளான்.
ராமநாதபுரம்,
கீழக்கரை தட்டாந்தோப்பு பகுதியை சேர்ந்த வெங்கடேஸ்வரன், வைஷ்ணவி ஆகியோரின் மகன் விஸ்வபிரணவ்(வயது2). வீட்டில் சாதாரணமாக விளையாடும்போது நன்றாக உடல் வளைந்து கொடுப்பதை கண்ட பெற்றோர் சிறுவனுக்கு அதனை சாதனையாக மாற்ற பயிற்சி அளித்தனர். இதற்காக யோகாசன பயிற்சி தொடர்பான புத்தகங்கள், படங்கள், பேனர்கள் முதலியவற்றை வாங்கி வந்துஅதற்கான விளக்கத்தை சொல்லிக்கொடுத்து அதன்படி செய்யும்படி கூறியுள்ளனர்.
அதனை கூர்ந்து கவனித்து பார்த்த சிறுவன் விஸ்வபிரணவ் யோகாசனங்களை சர்வசாதாரணமாக செய்துள்ளான். கடினமாக ஆசனங்களை கூட தொடர்ச்சியாக செய்து காட்டிய சிறுவன் ஒருசில நாட்களில் யோகாசனத்தில் சிறந்த சிறுவனாக மாறினான். சிரசாசனம், தனுராசனம், சக்ராசனம் உள்ளிட்ட 22 ஆசனங்களை தொடர்ச்சியாக செய்து சிறுவன் சாதனை படைத்துள்ளான். யோகாசனம் செய்தபின்னர் சிறுவனின் உடலில் நல்ல மாற்றம் ஏற்பட்டதோடு, சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கி உள்ளான்.
சிறுவனின் இந்த சாதனையை பாராட்டி வில்மெடல் சாதனை சிறுவன் சான்றிதழ் வழங்கப்பட்டுஉள்ளது. வில்மெடல் சாதனை நிறுவன தலைவர் கலைராணி, செயலாளர் தக்மிதாபானு ஆகியோர் வழங்கி பாராட்டினர். இந்த சிறுவன் முகவை சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.