மின்சாரம் தாக்கி பெண் பலி


மின்சாரம் தாக்கி பெண் பலி
x
தினத்தந்தி 1 Oct 2018 10:00 PM GMT (Updated: 1 Oct 2018 10:38 PM GMT)

திட்டக்குடி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

திட்டக்குடி, 

திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடி அருகே உள்ள கொட்டாரத்தில் வசிப்பவர் முருகேசன், விவசாயி. இவரது மனைவி கலையரசி (வயது 50). இவர் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த தனது பேரக்குழந்தைகளை அழைத்து வர சென்றார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெயராமன் என்பவரது வீட்டின் சுவரில் இருந்த ‘எர்த்’ கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்தது.

இதுபற்றி அறியாத கலையரசி தனது பேரக்குழந்தைகளை அழைத்து வர செல்லும் போது, அந்த கம்பியில் கை வைத்ததாக தெரிகிறது. இதில் கலையரசியின் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கலையரசி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட உறவினர்கள் கலையரசியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story