வீராணம் ஏரியில் மூழ்கி அரசு ஊழியர் பலி


வீராணம் ஏரியில் மூழ்கி அரசு ஊழியர் பலி
x
தினத்தந்தி 2 Oct 2018 9:30 PM GMT (Updated: 2 Oct 2018 5:57 PM GMT)

சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரியில் மூழ்கி அரசு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேத்தியாத்தோப்பு, 


சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சி.சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் மகாதேவன் மகன் வெங்கடசுப்பிரமணியன் (வயது 44). இவர் சிதம்பரம் அருகே கவரப்பட்டு அரசு பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் வெங்கடசுப்பிரமணியன் பூதங்குடி அருகே வீராணம் ஏரி கரையோரம் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், உடனே இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் ஆனந்தன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பொதுமக்களுடன் சேர்ந்து வீராணம் ஏரியில் இறங்கி வெங்கடசுப்பிரமணியனை தேடினர். அப்போது வி.என்.எஸ். மதகு அருகில் வெங்கடசுப்பிரமணியனை பிணமாக மீட்டனர்.

இதுபற்றி அறிந்து வந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் மற்றும் ஒரத்தூர் போலீசார், விசாரணை நடத்தினர். பின்னர் வெங்கடசுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story