காதல் திருமணம் செய்த தொழிலாளிக்கு கத்திக்குத்து


காதல் திருமணம் செய்த தொழிலாளிக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 3 Oct 2018 9:30 PM GMT (Updated: 3 Oct 2018 7:29 PM GMT)

நிலக்கோட்டை அருகே, காதல் திருமணம் செய்த தொழிலாளியை கத்தியால் குத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நிலக்கோட்டை, 


நிலக்கோட்டை அருகே உள்ள மைக்கேல்பாளையம் செல்வநகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அவருடைய மகன் விஜயவேல் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த அழகர்சாமி மகள் வனிதா என்பவரை காதலித்து, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு வெளியூரில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் செல்வநகரில் தனது உறவினர் ஒருவர் இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜயவேல் வந்துள்ளார். இதையறிந்த அழகர்சாமியின் தம்பி ராமகிருஷ்ணன் (39) அங்கு வந்து விஜயவேலிடம் தகராறு செய்துள்ளார். அப்போது தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணன் தனது உறவினர்களான காமராஜ் (23), சிவசக்தி (19) ஆகியோருடன் சேர்ந்து விஜயவேலை தாக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் கத்தியால் குத்தியதாக தெரிகிறது. மேலும் தடுக்க வந்த விஜயவேலின் தந்தை கிருஷ்ணமூர்த்தியும் தாக்கப்பட்டார்.

இதில் படுகாயம் அடைந்த 2 பேரும், நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் அவர்கள், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விஜயவேல் கொடுத்த புகாரின் பேரில் நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

இதேபோல் விஜயவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தன்னை தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி அழகர்சாமி புகார் கொடுத்தார். அதன்பேரிலும் விஜயவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story