கும்மிடிப்பூண்டியில் பலத்த மழை சாலையோரம் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி


கும்மிடிப்பூண்டியில் பலத்த மழை சாலையோரம் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி
x
தினத்தந்தி 4 Oct 2018 10:30 PM GMT (Updated: 4 Oct 2018 4:59 PM GMT)

கும்மிடிப்பூண்டியில் பெய்த பலத்த மழையால் கன்டெய்னர் லாரி சாலையோரம் கவிழ்ந்தது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக பலத்தமழை பெய்தது. குறிப்பாக கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான கவரைப்பேட்டை, எளாவூர், ஆரம்பாக்கம், பாதிரிவேடு, மாதர்பாக்கம், ஈகுவார்பாளையம் உள்பட பல பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி பஜாரான ஜி.என்.டி. சாலையில் சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட இடங்களில் தற்போது மழை நீர் குளம் போல் தேங்கிய நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் சாலையோரம் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகத்திற்கோ, கடைகளுக்கோ, வீடுகளுக்கோ பொதுமக்கள் வழக்கம் போல் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இது தவிர கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையான சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சிறு பாலம் மற்றும் சாலை சீரமைப்பு மற்றும் விரிவாக்க பணிகள் முறையான அறிவிப்பு பலகை ஏதுமின்றி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இதனால் மேற்கண்ட சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அதற்குரிய வேகத்தில் தினமும் பயணிக்கும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது வாடிக்கையான செயலாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், பல்தத மழை காரணமாக கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையான சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று சாலையோரம் கவிழ்ந்தது. இதில் லாரியின் டிரைவர் மற்றும் கிளனருக்கு எந்த வித பாதிப்பும் இல்லை.

இந்த விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மணவாளநகர், புட்லூர், அரண்வாயல், திருமழிசை, வெள்ளவேடு, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, திருப்பாச்சூர், ஈக்காடு, கடம்பத்தூர், பேரம்பாக்கம், இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, கீழச்சேரி, பண்ணூர், கண்ணூர், கொட்டையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காஞ்சீபுரம், சிறு காவேரிபாக்கம், பாலுச்செட்டிச்சத்திரம், கோவிந்தவாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

Next Story