வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டல்; போலீஸ்காரர் இடமாற்றம்


வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டல்; போலீஸ்காரர் இடமாற்றம்
x
தினத்தந்தி 4 Oct 2018 9:25 PM GMT (Updated: 4 Oct 2018 9:25 PM GMT)

சேலத்தில் மாமூல் கேட்டு வியாபாரியை மிரட்டிய போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். வியாபாரியை மிரட்டும் வீடியோ வாட்ஸ்-அப்பில் வெளியானதால் போலீஸ் கமிஷனர் சங்கர் நடவடிக்கை எடுத்துள்ளார். சேலத்தில் வாட்ஸ்-அப்பில் ஒரு வீடியோ வேகமாக பரவியது. அந்த வீடியோவில் பதிவான காட்சிகள் விவரம் வருமாறு:-

சேலம், 

சேலம் 5 ரோடு பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் அந்த பானிபூரி கடைக்கு சென்று, அந்த வியாபாரியிடம் மாமூல் கேட்கிறார்.
அதற்கு அவர் தற்போது வியாபாரம் சரியாக இல்லை. எனவே பிறகு தருகிறேன் என்று கூறுகிறார். பணம் தர வில்லை என்றால் கடை போடக் கூடாது என்று கூறுகிறார்.

மேலும் அந்த வியாபாரியை போலீஸ்காரர் ஆபாசமாக திட்டி மிரட்டுவது போன்றும், வாக்குவாதம் செய்வது போன்றும் வீடியோவில் பதிவாகி இருந்தது. வாட்ஸ்-அப்பில் பரவிய இந்த வீடியோ காட்சி நேற்று சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த வீடியோவில் இருந்த போலீஸ்காரர் பழனிசாமியை ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து கமிஷனர் உத்தர விட்டார்.


Next Story