இன்னும் ஒரு மாதத்தில் மெகா கூட்டணி இறுதி வடிவம் பெறும் - அசோக் சவான்


இன்னும் ஒரு மாதத்தில் மெகா கூட்டணி இறுதி வடிவம் பெறும் - அசோக் சவான்
x
தினத்தந்தி 4 Oct 2018 10:34 PM GMT (Updated: 4 Oct 2018 10:34 PM GMT)

மராட்டியத்தில் இன்னும் ஒரு மாதத்துக்குள் மெகா கூட்டணி இறுதி வடிவம் பெறும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் அசோக் சவான் கூறினார்.

மும்பை,

மராட்டியத்தில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன. மேலும் தேர்தல் வேலைகளை முன்கூட்டியே தொடங்கி உள்ளன.

ஓட்டுகள் பிரிவதை விரும்பாத இந்த கட்சிகள் பா.ஜனதாவுக்கு எதிரான மெகா கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளன. இதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் மெகா கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் அசோக் சவான் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது.

நாங்கள் கூட்டணியில் பிரகாஷ் அம்பேத்கரையும் இணைத்துக்கொள்வதில் உறுதியாக உள்ளோம். இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

அவர் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியை கூட்டணியில் இணைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அக்கட்சியுடன் கைகோர்ப்பத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தயக்கம் உள்ளது. இந்த பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்.

பா.ஜனதாவுக்கு சாதகமான எதையும் நாங்கள் செய்யமாட்டோம். .

இதேபோல் ராஜூ ஷெட்டி எம்.பி, லேக்தந்திரிக் ஜனதாதல் தலைவர் கபில் பாட்டீல் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் நாங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

பகுஜன் சமாஜ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த முடிவை டெல்லி தலைமை எடுக்கும்.

இன்னும் ஒரு மாதத்திற்குள் மெகா கூட்டணி இறுதி வடிவம் பெறும்.

இவ்வாறு அசோக் சவான் கூறினார்.

Next Story