51 கிளைகளை மூடுகிறது, மகாராஷ்டிரா வங்கி


51 கிளைகளை மூடுகிறது, மகாராஷ்டிரா வங்கி
x
தினத்தந்தி 4 Oct 2018 11:42 PM GMT (Updated: 4 Oct 2018 11:42 PM GMT)

மகாராஷ்டிரா வங்கி நஷ்டத்தில் இயங்கும் தனது 51 கிளைகளை மூடுகிறது.

மும்பை,

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் மகாராஷ்டிரா, புனேயை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் கிளைகள் நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ளன. இந்த நிலையில், நஷ்டத்தில் இயங்கும் 51 கிளைகளை மகாராஷ்டிரா வங்கி மூட முடிவு செய்து உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்த வங்கி நேற்று முன்தினம் வெளியிட்டது.

இதன்படி தானேயில் 7, மும்பையில் 6, புனேயில் 5, ஜெய்ப்பூரில் 4, நாசிக், பெங்களூருவில் தலா 3, அமராவதி, லாத்தூர், அவுரங்காபாத், ஜல்காவ், நாக்பூர், சத்தாரா, ஐதராபாத், சென்னையில் தலா 2, நொய்டா, கொல்கத்தா, சண்டிகர், ராய்ப்பூர், கோவா, சோலாப்பூர், கோலாப்பூரில் தலா ஒரு கிளைகளும் மூடப்படுகின்றன.

எனவே இந்த கிளைகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது காசோலை புத்தகங்களை நவம்பர் 30-ந் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் அவர்களது ஐ.எப்.எஸ்.சி. மற்றும் எம்.ஐ.சி.ஆர். குறியீடுகள் டிசம்பர் 31-ந் தேதியுடன் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story