தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்கு பதிவு செய்யகோரி தூத்துக்குடி மாணவியின் தந்தை கோர்ட்டில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்பு


தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்கு பதிவு செய்யகோரி தூத்துக்குடி மாணவியின் தந்தை கோர்ட்டில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்பு
x
தினத்தந்தி 5 Oct 2018 9:30 PM GMT (Updated: 5 Oct 2018 3:04 PM GMT)

பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி தூத்துக்குடி மாணவி சோபியாவின் தந்தை கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

தூத்துக்குடி, 

பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி தூத்துக்குடி மாணவி சோபியாவின் தந்தை கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். மனு மீதான விசாரணை வருகிற 10–ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

ஆராய்ச்சி மாணவி 

தூத்துக்குடியை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி சோபியா கடந்த மாதம்(செப்டம்பர்) 3–ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அதே விமானத்தில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வந்தார். அப்போது, சோபியா பா.ஜனதாவுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சோபியாவுக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் அளித்த புகாரின் பேரில் சோபியா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதே போன்று சோபியாவின் தந்தை சாமி, தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் 10 பேர் சேர்ந்து தன்னையும், மகளையும் மிரட்டியதாக புகார் கொடுத்தார். இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

கோர்ட்டில் மனு 

இந்த நிலையில் சாமி தூத்துக்குடி 3–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி முன்னிலையில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், கடந்த மாதம் 3–ந் தேதி பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது நான் அளித்த புகார் மனு மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆகையால் அந்த மனு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட்டு மனு மீதான விசாரணையை வருகிற 10–ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Next Story