தந்தை இறந்த சோகத்தில் பெண் தற்கொலை கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது


தந்தை இறந்த சோகத்தில் பெண் தற்கொலை கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 5 Oct 2018 11:15 PM GMT (Updated: 5 Oct 2018 8:10 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே தந்தை இறந்த சோகத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் தன் கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புக்குளம் அருகே உள்ள காரக் காட்டு குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். டாஸ்மாக் ஊழியர். இவருக்கும், சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த கவிதாவுக்கும் (வயது 30) திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கவிதாவின் அப்பா ராஜூ 3 மாதத்திற்கு முன்பு மாரடைப்பால் இறந்தார். இதனால் தனது தந்தையின் நினைவாகவ கவிதா சோகமாக காணப்பட்டார்.

கவிதா நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியே இருந்தார். அப்போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஆரம்பாக்கம் போலீசார், கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கவிதா வீட்டில் சோதனையும் செய்தனர். அப்போது அவர் தனது கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் கவிதா எழுதி இருந்ததாவது:-

அன்புள்ள கணவருக்கு, உங்கள் அன்பு மனைவி கவிதா எழுதிக்கொள்வது. எனக்கு வாழ விருப்பம் இல்லை. நான் பைத்தியக்காரி போல் இருக்கிறேன். நம்முடைய 2 குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும். குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள். என்னுடைய கடைசி ஆசை, நீங்கள் நல்ல பெண்ணை திருமணம் முடித்து கொள்ளுங்கள். நான் ஒரு கோழைத்தனமான முடிவை எடுத்து உள்ளேன்.

அம்மா என்னை மன்னித்து விடு. அப்பா இல்லாத வேதனையை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவரோடு நானும் போக முடிவு எடுத்து விட்டேன். யாரோ என்னை கூப்பிடுவது போல இருக்கிறது. என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். இவ்வாறு கவிதா எழுதி இருந்தார்.

தந்தை மறைவை தாங்க முடியாமல் கவிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story