நெல்லை வாலிபருக்கு 7 ஆண்டுகள் ஜெயில்; சிவகங்கை கோர்ட்டு உத்தரவு


நெல்லை வாலிபருக்கு 7 ஆண்டுகள் ஜெயில்; சிவகங்கை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Oct 2018 10:52 PM GMT (Updated: 5 Oct 2018 10:52 PM GMT)

சிவகங்கை அருகே பயங்கர ஆயுதங்களுடன் காரில் பிடிப்பட்ட நெல்லையைச் சேர்ந்த வாலிபருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.

சிவகங்கை,

சிவகங்கை தாலுகா போலீசார் கடந்த 9.9.2010 அன்று நாட்டரசன்கோட்டை விலக்கு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியில் வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் வாள், அரிவாள் உள்ளிட்ட பல்வேறு பயங்கர ஆயுதங்கள் இருந்தன.

இதையடுத்து போலீசார் அந்த காரில் இருந்த நெல்லை மாவட்டம் வையாபுரி நகரைச் சேர்ந்த அய்யப்பன் என்ற குட்டி(வயது32), பாளையங்கோட்டை நடுத்தெருவைச் சேர்ந்த சிவா என்ற சிதம்பரம்(34), அம்பாசமுத்திரம் ஆம்பர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்ற சரவணன்(31) ஆகிய 3பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அந்த காரை சென்னையில் இருந்து காரின் டிரைவரை கட்டிப்போட்டு விட்டு கடத்தி வந்ததும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பிடிப்பட்ட 3 பேரையும் கைது செய்து அவர்கள் மீது சிவகங்கையில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது சிவா என்ற சிதம்பரம் இறந்துவிட்டார்.

இதையடுத்து மீதமுள்ள 2 பேர் மீது வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அய்யப்பன் என்ற குட்டிக்கு கடந்த 2013–ம் ஆண்டு 7ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ராதிகா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட சங்கர் என்ற சரவணனுக்கு 7 ஆண்டு ஜெயில்தண்டனையும், ரூ.500அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


Next Story