பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அதிகாரிகள் மலர் தூவி திறந்து வைத்தனர்


பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அதிகாரிகள் மலர் தூவி திறந்து வைத்தனர்
x
தினத்தந்தி 6 Oct 2018 10:30 PM GMT (Updated: 6 Oct 2018 6:31 PM GMT)

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகாரிகள் மலர் தூவி தண்ணீரை திறந்து வைத்தனர்.

ஊத்துக்கோட்டை,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம். கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கடந்த மாதம் 29-ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீீர் வந்து கொண்டிருக்கிறது.

தொடக்கத்தில் வினாடிக்கு 70 கன அடி தண்ணீர் வந்து சேர்ந்தது. அதன் பின்னர் தண்ணீர் வரத்து அதிகமானது. நேற்று காலை வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர் மட்டம் 21.26 அடியாக பதிவானது. 375 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. கண்டலேறு அணையில் இருந்து வரும் தண்ணீர் பூண்டி ஏரியில் முழுவதுமாக நிரம்புவதை தவிர்த்து நேராக இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விட பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஏரியில் கால்வாய் வெட்டினர். இந்த பணிகள் நிறைவடைந்ததால் நேற்று புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

பொதுப் பணித்துறை உதவி செயற் பொறியாளர் கவுரிசங்கர், உதவி பொறியாளர் ரமேஷ், சென்னை குடிநீர் வாரிய உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு பூஜைகள் நடத்தி, மலர் தூவி தண்ணீரை திறந்து வைத்தனர். பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சென்னையில் குடிநீர் வினியோகம் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பூண்டி ஏரியில் இருந்து 30 கன அடியும், புழல் ஏரியில் இருந்து 90 கன அடியும், செம்பரம்பாக்கத்தில் இருந்து 42 கன அடி வீதமும் குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கவிருக்கும் நிலையில் ஏரிகளின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நேற்றைய நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 12 மில்லி மீட்டரும், சோழவரத்தில் 25 மில்லி மீட்டரும், புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 14 மில்லி மீட்டரும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 22 மில்லி மீட்டர் அளவும் மழை பெய்தது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4 ஏரிகளில் 742 மில்லியன் கன அடி மட்டுமே இருந்த நிலையில் தற்போது 1.1 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதன் மூலம் அடுத்த 4 மாதங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

Next Story