ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன்-3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை


ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன்-3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
x
தினத்தந்தி 6 Oct 2018 10:45 PM GMT (Updated: 6 Oct 2018 7:37 PM GMT)

அய்யம்பேட்டையில், ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அய்யம்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை கீழ்மேல் புதுத் தெருவை சேர்ந்தவர் கணேஷ்(வயது 53). இவர் மாத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 4-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார்.

நேற்று முன்தினம் இரவு அய்யம்பேட்டை பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால் அங்கு ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், கணேஷ் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர்.

பின்னர் வீட்டின் உள்ளே இருந்த 3 பீரோக்கள், ஒரு லாக்கரை உடைத்து அதில் இருந்த சங்கிலி, மோதிரம், நெக்லஸ் உள்ளிட்ட 30 பவுன் நகைகளையும், 3 கிலோ வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். மோப்ப நாய் மூலம் துப்பு துலக்கப்படுவதை தடுப்பதற்காக மர்ம நபர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றனர்.

நேற்று காலை கணேசின் வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், அய்யம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கணேசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மர்ம நபர்கள் கணேசின் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து 30 பவுன் நகைகள் மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து தடயவியல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகண்ணகி மற்றும் போலீசார் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

வீட்டின் ஒரு பகுதியில் மர்ம நபர்கள், கதவு மற்றும் பீரோக்களை உடைக்க பயன்படுத்திய சிறிய கடப்பாரை ஒன்று கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 30 பவுன் நகைகளையும், வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், வெள்ளி பொருட்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அய்யம்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story