ராமர் கோவில் கட்டுவதற்கு ஏன் அனுமதி பெறவேண்டும்? பா.ஜனதாவுக்கு, சிவசேனா கேள்வி


ராமர் கோவில் கட்டுவதற்கு ஏன் அனுமதி பெறவேண்டும்? பா.ஜனதாவுக்கு, சிவசேனா கேள்வி
x
தினத்தந்தி 6 Oct 2018 11:18 PM GMT (Updated: 6 Oct 2018 11:18 PM GMT)

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஏன் அனுமதி பெறவேண்டும் என பா.ஜனதாவுக்கு, சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

மும்பை,

2014-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் பா.ஜனதா அயோத்தியில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என்று கூறி இருந்தது.

ஆனால் அவர்கள் கூறிய வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. ஆனால் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா தொடர்ந்து ராமர் கோவில் விவகாரத்தில் மத்திய பா.ஜனதா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

சமீபத்தில் கூட ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவர், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உதவி செய்யுமாறு கூறினார்.

இதையடுத்து உத்தவ் தாக்கரே விரைவில் அயோத்திக்கு செல்வார் என்று அக்கட்சி சார்பில் தகவல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் ராமர் கோவில் விவகாரம் குறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவுத் பா.ஜனதா அரசை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் பா.ஜனதா அரசு ஏன் அனுமதி பெறவேண்டும்?

சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த பாபர் மசூதியை இடித்து தள்ளுவதற்கு நாம் யாருடைய அனுமதியும் பெறவில்லை. ஆனால் இப்போது மட்டும் ஏன் கோவில் கட்டுவதற்கு அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கவேண்டும்.

பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் கம்பீரமாக ஒரு ராமர் கோவிலை கட்டும் உறுதியை கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story