விண்வெளி வார நிறைவு விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று ஓசூர் வருகிறார்


விண்வெளி வார நிறைவு விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று ஓசூர் வருகிறார்
x
தினத்தந்தி 7 Oct 2018 10:45 PM GMT (Updated: 7 Oct 2018 9:31 PM GMT)

விண்வெளி வார நிறைவு விழாவில் பங்கேற்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (திங்கட்கிழமை) ஓசூர் வருகிறார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், உலக விண்வெளி வாரத்தையொட்டி செயற்கை கோள் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த கண்காட்சியை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக, உலக விண்வெளி வாரத்தையொட்டி ஓசூர் எம்.ஜி.ரோட்டில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பிரபாகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில், ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி, எம்.ஜி.ஆர். கல்லூரி, ஸ்டேன்போர்டு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் விஞ்ஞானி செல்வராஜ், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, தாசில்தார் முத்துப்பாண்டி, ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சென்னகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

இந்தநிலையில், விண்வெளி வார நிறைவு விழா, இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு ஓசூர் அதியமான் கல்லூரியில் நடக்கிறது. இந்த விழாவிற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பாண்டியன் தலைமை தாங்குகிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி முன்னிலை வகிக்கிறார். துணை பொது மேலாளர், விஞ்ஞானி முனிரத்தினம் வரவேற்று பேசுகிறார். திட்ட இயக்குனர் வெங்கட்ராமன், கலெக்டர் பிரபாகர், ஓசூர் அதியமான் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். விழாவில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பேசுகிறார். முடிவில், விஞ்ஞானி ராஜேஷ் நன்றி கூறுகிறார்.

கவர்னர் வருகையையொட்டி, ஓசூர் அதியமான் கல்லூரி பகுதியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி நேற்று கல்லூரிக்கு சென்று, விழா நடைபெறும் இடம், உள் மற்றும் வெளி வாசல் பகுதி, மேடை அமைப்பு, முக்கிய பிரமுகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அமரும் இடம், பாதுகாப்பு வசதிகள், வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், கவர்னர் வருகையையொட்டி, சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார் உத்தரவின்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் மேற்பார்வையில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார். அப்போது ஓசூர் அட்கோ இன்ஸ்பெக்டர் பெரியசாமி உடனிருந்தார்.

Next Story