3-ம் கட்டமாக 1,648 இடங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் - கலெக்டர் ராமன் ஆய்வு


3-ம் கட்டமாக 1,648 இடங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் - கலெக்டர் ராமன் ஆய்வு
x
தினத்தந்தி 7 Oct 2018 11:30 PM GMT (Updated: 7 Oct 2018 10:09 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் 1,648 இடங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர்,

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்தும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் கடந்த மாதம் 9-ந் தேதி மற்றும் 23-ந் தேதி என 2 கட்டங்களாக வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது.

வேலூர் மாவட்டத்தில் 2 கட்டங்களாக நடந்த சிறப்பு முகாம்களில் 42 ஆயிரம் பேர் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் செய்வது தொடர்பான விண்ணப்பங்களை வழங்கினர்.

இந்த நிலையில் 3-ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நேற்று நடந்தது. வேலூர் மாவட்டம் முழுவதும் 1,648 இடங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் காலை முதலே சிறப்பு முகாம்களுக்கு சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பித்தனர்.

வேலூர் மாநகராட்சி அலமேலுரங்காபுரம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மற்றும் சத்துவாச்சாரி எத்திராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் முகாம் நடைபெறுவது குறித்து கேட்டறிந்தார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 1,648 வாக்குச்சாவடிகள் மற்றும் 3 ஆயிரத்து 453 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தலின்போது நேரடியாக இணையதள வசதி வழங்கும் பொருட்டு சோதனை ஓட்டம் நடந்தது. இதையொட்டி சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்கள் செல்போனில் வாக்குச்சாவடியின் முகப்பு மற்றும் மையத்தின் உள்பகுதியை 30 வினாடிகள் வீடியோ எடுத்து 94441-23456 என்ற தொலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைத்தனர். இந்த பணியையும் கலெக்டர் ராமன் பார்வையிட்டார்.

ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாராயணன் (தேர்தல்), தேர்தல் பிரிவு தாசில்தார் பாலாஜி, வேலூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.

மாவட்டம் முழுவதும் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் பணியில் 3 ஆயிரத்து 453 வாக்குச்சாவடி அலுவலர்கள், 1,648 தலைமை ஆசிரியர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் 4-ம் கட்டமாக வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story