காலிமனைகளில் தேங்கியுள்ள குப்பைகள், மழைநீரை ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும் - கலெக்டர் ரோகிணி வேண்டுகோள்


காலிமனைகளில் தேங்கியுள்ள குப்பைகள், மழைநீரை ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும் - கலெக்டர் ரோகிணி வேண்டுகோள்
x
தினத்தந்தி 7 Oct 2018 11:30 PM GMT (Updated: 7 Oct 2018 11:30 PM GMT)

காலிமனைகளில் தேங்கியுள்ள குப்பைகள், மழைநீரை ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம்,

வடகிழக்கு பருவமழையையொட்டி சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்வழிப்பாதைகள் மற்றும் ஓடைகளை தூர்வாரும் பணிகளும், தீவிர தொற்று நோய் தடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தினமும் களப்பணியாளர்கள் மூலம் அனைத்து வீடுகளிலும், தீவிர தொற்று நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கொசுப்புழுக்கள் உருவாகாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சில வீடுகள் பயன்படுத்தப்படாமல் தொடர்ந்து பூட்டியே இருப்பதால் வீடுகளுக்குள் மழைநீர் தேங்கி கொசுப்புழுக்கள் உருவாகும் நிலை ஏற்படுகிறது.

மேலும் காலி மனைகளில் குப்பைகள், முள்புதர்கள், திடக்கழிவுகள், தேங்கியுள்ள மழைநீர் உள்ளிட்டவைகள் அகற்றப்படாமல் பொது சுகாதார மேம்பாட்டிற்கு தடையாக உள்ளது. இதனால் 500 மீட்டர் சுற்றளவுக்குள் குடியிருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட காலிமனை மற்றும் பயன்படாத நிலையில் உள்ள வீடுகளின் உரிமையாளர்கள் ஒரு வார காலத்திற்குள் அகற்றிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரோகிணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில், சேலம் அஸ்தம்பட்டி மண்டலம் 4-வது வார்டு நியூ பேர்லேண்ட்ஸ் குடியிருப்பு பகுதியில் நீர்தேக்க தொட்டிகள், குளிர்சாதன பெட்டிகள், பூந்தொட்டிகள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காத வகையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பது குறித்து நேற்று மாவட்ட கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார்.

மேலும், குடிநீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்த கலெக்டர், குடிநீர் சேமிக்க பயன்படுத்தும் பாத்திரங்கள், தொட்டிகள், டிரம்கள் ஆகியவற்றை உரிய கால இடைவெளியில் சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வரும்பொழுது, காலிமனைகளில் பொது சுகாதாரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குப்பைகள் மற்றும் தேங்கியுள்ள மழைநீரை ஒரு வாரத்திற்குள் அகற்றப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால், மாநகராட்சி நிர்வாகமே அப்புறப்படுத்தி, அதற்கான செலவின தொகையை அபராதத்துடன் சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் வசூலிக்கப்படும்.

எனவே பொதுமக்கள் அனைவரும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கி, பொது சுகாதார மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கலெக்டர் ரோகிணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி நகர்நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர் கோவிந்தன், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், சுகாதார அலுவலர் ரவிச்சந்தர், சுகாதார ஆய்வாளர்கள் சங்கர், சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story