மாமல்லபுரத்தில் வீடுகளின் மின் இணைப்புக்கு தரை வழி கேபிள் பதிக்கும் பணி தீவிரம்


மாமல்லபுரத்தில் வீடுகளின் மின் இணைப்புக்கு தரை வழி கேபிள் பதிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 8 Oct 2018 10:00 PM GMT (Updated: 8 Oct 2018 5:12 PM GMT)

சென்னை பெருநகர மாநகராட்சி போலவே மாமல்லபுரத்திலும் வீடுகளின் மின் இணைப்புகளுக்கு தரை வழி கேபிள் பதிக்கும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களுக்கு மின் கம்பங்கள் மூலம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வந்தது.

சர்வதேச சுற்றுலா மையமான இங்கு சென்னை பெருநகர மாநகராட்சி போல் மின் கம்பங்களை அகற்றிவிட்டு, தரை வழி கேபிள் மூலமாக மின் இணைப்புகள் வழங்க வேண்டும் என்று கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் அப்போதைய மாவட்ட கவுன்சிலர் மாமல்லபுரம் ஏ.வீராசாமி வலியுறுத்தினார்.

மேலும் இது தொடர்பாக அப்போதைய மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதனிடமும் கோரிக்கை விடுத்து மனு வழங்கினார்.

இதையடுத்து இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அப்போது தமிழக மின்வாரியத்திற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்ய மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்தார். இதையடுத்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு மின் வாரிய நிர்வாகம் தரைவழி கேபிள் இணைப்பு வழங்க ஒப்புதல் வழங்கியது.

தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மாமல்லபுரம் நகரப்பகுதி முழுவதும் வீடுகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்களுக்கு தரைவழி கேபிள் மூலம் மின்இணைப்பு வழங்க, ஆங்காங்கே சாலை ஓரம் பள்ளம் தோண்டப்பட்டு தரைவழி கேபிள் பதிக்கும் பணிகள் தொடங்கி, தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கேபிள் பதிக்கும் பணி முடிந்தவுடன் மின் கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு தரைவழி கேபிள் மூலம் மின் இணைப்பு வழங்க மாமல்லபுரம் மின்வாரிய நிர்வாகம் துரித கதியில் பணிகளை மேற்கொண்டுள்ளது.

தரை வழி கேபிள் இணைப்புகள் வழங்கப்பட்டவுடன் மின் கம்பங்கள் அனைத்தும் படிப்படியாக அகற்றப்பட உள்ளன. இதனால் காற்றுடன் கூடிய மழை, புயல் காற்று போன்ற பேரிடர் காலங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து ஏற்படும் உயிரிழப்புகள் முற்றிலும் தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story