சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை


சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை
x
தினத்தந்தி 10 Oct 2018 10:45 PM GMT (Updated: 10 Oct 2018 1:35 PM GMT)

சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகையிட்டனர்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் நேற்று பகல் 11.30 மணி அளவில் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள். இதில் பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம், மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொறுப்பாளர்கள் மோகன்குமார், ஸ்டாலின் சிவக்குமார், சுடர் நடராஜ், சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தாசில்தார் கார்த்திக் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:–

சத்தியமங்கலம், குத்தியாலத்தூர், அரசூர், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டும், வீடு இல்லாதவர்களுக்கு இடம் கேட்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் 4 ஆயிரத்து 625 மனுக்கள் கொடுத்தோம். இதில் ஒரு சிலருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படாமலும், பட்டா கொடுத்தும் இடம் காட்டப்படாமலும் உள்ளது. உடனே எங்கள் கோரிக்கைளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதற்கு தாசில்தார், ‘உங்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்’ என்றார். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story