குமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்


குமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2018 11:00 PM GMT (Updated: 10 Oct 2018 2:42 PM GMT)

குமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் மாணவ– மாணவிகள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்,

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறியும், தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் குமரி மாவட்டத்தில் பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ–மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே நேற்று முன்தினம் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு மாணவ– மாணவிகள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

உடனே போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும் குமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் நேற்று மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

 நாகர்கோவிலில் இந்து கல்லூரி, கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, பயோனியர் குமாரசாமி கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் போராட்டம் நடந்தது.

இதே போல் சுங்கான்கடை அய்யப்பா மகளிர் கல்லூரியிலும் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.

மேலும் லெட்சுமிபுரம் கலைக்கல்லூரியிலும் போராட்டம் நடைபெற்றது.

 இதற்காக மாணவ–மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கல்லூரிகளிலும் 150–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

உள்ளிருப்பு போராட்டமானது அனைத்து கல்லூரிகளிலுமே நுழைவு வாயில் அருகே நடந்தது. அனைத்து மாணவ–மாணவிகளும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களது தொடர் கோரிக்கையை வலியுறுத்தியும், போலீசாருக்கு எதிராகவும் கோ‌ஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தையொட்டி சம்பந்தப்பட்ட கல்லூரிகள் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story