கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்


கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2018 10:52 PM GMT (Updated: 10 Oct 2018 10:52 PM GMT)

காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர், நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கன்வாடி மைய சாவிகளுடன், கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். செயலாளர் ஈஸ்வரி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் முருகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, அனைத்து மாவட்டங்களிலும் அங்கன்வாடி பணியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. இதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பே நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இன்னும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதுகுறித்து கலெக்டரிடம் 4 முறை புகார் அளித்துவிட்டோம். மேலும் பல்வேறு போராட்டங்களும் நடத்திவிட்டோம்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே காலிப்பணியிடங்களை நிரப்பும் வரை, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மேலும் அங்கன்வாடி மையங்களின் சாவியை ஒப்படைக்க உள்ளோம், என்றனர்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதேபோல், கலெக்டர் அலுவலக அதிகாரிகளும், அங்கன்வாடி பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கலெக்டர் டி.ஜி.வினய், சங்க நிர்வாகிகளுடன் செல்போனில் பேசினார். அப்போது, இன்னும் 3 நாட்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அவர் உறுதி அளித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story