ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் பழகி பெண்ணிடம் ரூ.7¼ லட்சம் மோசடி


ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் பழகி பெண்ணிடம் ரூ.7¼ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 10 Oct 2018 11:29 PM GMT (Updated: 10 Oct 2018 11:29 PM GMT)

ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் பழகி பெண்ணிடம் ரூ.7¼ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

தானே,

தானே ரபோடி பகுதியில் கணவரை பிரிந்த பெண் (வயது38) ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் மறுமணத்திற்காக ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலமாக மணமகன் தேடி வந்தார்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் பெண்ணுக்கு இங்கிலாந்தை சேர்ந்தவர் என கூறிக்கொண்டு டொனால்டு வில்லியம் (23) என்பவர் அறிமுகம் ஆனார். அவர் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். இதை நம்பிய பெண்ணும் அவருடன் பேசி வந்தார்.

ரூ.7¼ லட்சம் மோசடி

இந்தநிலையில் லண்டனில் இருந்து பெண்ணிற்கு விலை உயர்ந்த அன்பளிப்பு பொருட்களை அனுப்ப உள்ளதாகவும் அதற்கு சுங்க வரி உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் செலுத்த வேண்டும் என டொனால்டு வில்லியம் கூறினார். இதை நம்பிய பெண் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.7¼ லட்சம் வரை அனுப்பினார். ஆனால் அன்பளிப்பு எதுவும் வரவில்லை. மேலும் அதன்பிறகு டொனால்டு வில்லியமை பெண்ணால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் சம்பவம் குறித்து ரபோடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை தேடி வருகின்றனர்.

Next Story