தஞ்சை பெரியகோவிலில் உள்ள பழங்கால ஐம்பொன் சிலைகள் மாற்றமா? தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு


தஞ்சை பெரியகோவிலில் உள்ள பழங்கால ஐம்பொன் சிலைகள் மாற்றமா? தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 11 Oct 2018 11:15 PM GMT (Updated: 11 Oct 2018 7:03 PM GMT)

தஞ்சை பெரியகோவிலில் வைக்கப்பட்டு உள்ள பழங்கால ஐம்பொன் சிலைகள் மாற்றப்பட்டுள்ளதா? என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முன்னிலையில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர்,

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த கோவிலில் இருந்த ராஜராஜசோழன் சிலை மற்றும் அவருடைய பட்டத்தரசியான லோகமாதேவி சிலைகள் திருட்டு போனது. இந்த சிலைகள் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டன.

இந்த சிலைகளை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு வந்தனர். இந்த சிலைகள் தஞ்சை பெரியகோவிலில் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் தஞ்சை பெரியகோவிலில் உள்ள சிலைகள் அனைத்தும் அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் ஏற்கனவே ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் இக்கோவிலில் உள்ள ஐம்பொன்னால் ஆன 41 பழங்கால ஐம்பொன் சிலைகளின் தொன்மை குறித்து தென்மண்டல தொல்லியல் துறை இயக்குனர் நம்பிராஜன் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது 60 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட சிலைகளின் புகைப்படங்களை கணினியில் பதிவு செய்து கொண்டு அவை அனைத்தும் தற்போது உள்ள சிலைகளுடன் ஒத்துப்போகிறதா? என்றும், அவற்றின் தொன்மை குறித்தும் ஆய்வு செய்தனர். இதற்காக சிலைகள் அனைத்தும் பெருவுடையார் சன்னதிக்கு செல்லும் வழி அருகே மேஜை மீது வைக்கப்பட்டு இருந்தன.

அதிகாரிகள் குழுவினர் ஒவ்வொரு சிலைகளையும் தனித்தனியே அதன் உயரம், எடை போன்றவை குறித்து ஆய்வு செய்து குறித்துக்கொண்டனர். பின்னர் நடராஜர் சன்னதிக்கு சென்று அங்குள்ள சிலையையும் ஆய்வு செய்தனர். மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வு இரவு 7.30 மணி வரை தொடர்ந்து 3½ மணி நேரம் நடந்தது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, கோசலைராமன் மற்றும் போலீசார் முன்னிலையில் இந்த ஆய்வு நடந்தது. தொல்லியல்துறை அதிகாரிகள் சந்தேகங்களை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருடன் கேட்டு நிவர்த்தி செய்தனர். அப்போது அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாதவன் மற்றும் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

ஆய்வு முடிந்து வெளியே வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் கூறுகையில், “சிலைகள் மாற்றப்பட்டு இருக்கலாம் என்ற முகாந்திர அடிப்படையில் இந்த ஆய்வுப்பணி நடைபெறுகிறது. இது தொடர்ந்து நடைபெறும். இது முடிந்த பின்னர் தான் உண்மை நிலை தெரிய வரும்”என்றார்.

மேலும் இந்த குழுவினர் தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு சென்று அந்த கோவிலுக்கு சொந்தமான 19 சிலைகளையும் ஆய்வு செய்ய உள்ளனர்.

Next Story