ஆவின் ஊழியர் வீட்டில் ரூ.4½ லட்சம் நகை, பணம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு


ஆவின் ஊழியர் வீட்டில் ரூ.4½ லட்சம் நகை, பணம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Oct 2018 10:15 PM GMT (Updated: 11 Oct 2018 9:34 PM GMT)

கிருஷ்ணகிரியில் ஆவின் பால் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.4½ லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அக்ரஹாரம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான்பீட்டர் (வயது 47). இவர் ஆவினில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி ஷீலா (40). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை கணவன், மனைவி 2 பேரும் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டனர்.

மாலை அவர்கள் வீட்டிற்கு திரும்பிய போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜான்பீட்டர், ஷீலா ஆகிய 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் உள்ளே இருந்த 7 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. கொள்ளை போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஜான்பீட்டர் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

கைரேகை நிபுணர்களும் அங்கு பதிவாக இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை நடந்த வீட்டில் கொள்ளையன் ஒருவனின் கைகெடிகாரம் விட்டு சென்றது விசாரணையில் தெரிய வந்தது. அதை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story