மோகனூர் ஒன்றியத்தில் ரூ.31¼ லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு


மோகனூர் ஒன்றியத்தில் ரூ.31¼ லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 11 Oct 2018 10:30 PM GMT (Updated: 11 Oct 2018 9:48 PM GMT)

மோகனூர் ஒன்றியத்தில் ரூ.31¼ லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.

மோகனூர்,

மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட லத்துவாடி, என்.புதுப்பட்டி, அரூர் ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.31¼ லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் ஆய்வு செய்தார்.

முதலில் லத்துவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.51 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணியையும், லத்துவாடி பகுதியில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்படுவதையும் அவர் நேரில் பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் லத்துவாடி ஊராட்சி, ஈச்சவாரி பகுதியில் ரூ.4.57 லட்சம் மதிப்பீட்டில் 800 மரக்கன்றுகள் நடப்பட்டு நீரூற்றி பராமரிக்கப்பட்டு வரும் பணியையும், என்.புதுப்பட்டி ஊராட்சி பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் ஜங்கலாபுரம் முதல் என்.புதுப்பட்டி வரை வாய்க்கால் ஆழப்படுத்தி கரை பலப்படுத்தப்பட்டு வரும் பணியையும் கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டார்.

ஜங்கலாபுரம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணியையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 200 மரக்கன்றுகள் நடப்பட்டு நீரூற்றி பராமரிக்கப்பட்டு வரும் பணியையும் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சி.மாலதி, மோகனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்்கள், ஒன்றிய பொறியாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story