அரசு போக்குவரத்துக்கழக தர்மபுரி மண்டலத்தில் 7 புதிய பஸ்கள் இயக்கம்


அரசு போக்குவரத்துக்கழக தர்மபுரி மண்டலத்தில் 7 புதிய பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 11 Oct 2018 10:45 PM GMT (Updated: 12 Oct 2018 5:34 PM GMT)

அரசு போக்குவரத்துக் கழக தர்மபுரி மண்டலத்தில் 7 புதிய பஸ்கள் இயக்கத்தை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

தர்மபுரி,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள மண்டல அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழகத்திற்கு 7 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பஸ்களின் இயக்க தொடக்க விழா தர்மபுரி பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமதுல்லாகான் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் சிவன் அருள், அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் லாரன்ஸ், துணை மேலாளர்கள் சிவமணி, ஜெயபால், ராஜராஜன், மோகன்குமார், தர்மபுரி கிளை மேலாளர் அரசுபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு புதிய பஸ்களின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் புதிய பஸ் ஒன்றில் சிறிது தூரம் பயணம் மேற்கொண்டார்.

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 7 புதிய பஸ்களும் நீண்ட தூரத்தில் உள்ள ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன. இதன்படி தர்மபுரியில் இருந்து திருவண்ணாமலைக்கு ஒரு பஸ்சும், ஓசூரில் இருந்து மதுரைக்கு 2 பஸ்களும், சேலத்தில் இருந்து ஓசூருக்கு ஒரு பஸ்சும் இயக்கப்படுகின்றன. இதேபோன்று திருப்பத்தூரில் இருந்து பெங்களூருவுக்கு 2 பஸ்களும், சேலத்தில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு ஒரு பஸ்சும் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களை பயணிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்த விழாவில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், தர்மபுரி நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், துணைத்தலைவர் குருநாதன், அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் பரமசிவம், தலைவர் சிவன், பொருளாளர் முனிரத்தினம், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, பழனிசாமி, சிவப்பிரகாசம், பெரியண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story