சேலம்-தர்மபுரி மண்டலத்திற்கு 30 புதிய அரசு பஸ்கள் இயக்கம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


சேலம்-தர்மபுரி மண்டலத்திற்கு 30 புதிய அரசு பஸ்கள் இயக்கம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 Oct 2018 10:45 PM GMT (Updated: 12 Oct 2018 5:55 PM GMT)

சேலம், தர்மபுரி மண்டலத்திற்கு 30 புதிய அரசு பஸ்களை கலெக்டர் ரோகிணி கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.

சேலம்,

சேலம், தர்மபுரி மண்டலத்திற்கான புதிய அரசு பஸ்கள் இயக்கத்திற்கான விழா சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், சக்திவேல், மனோன்மணி, சின்னதம்பி, மருதமுத்து சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் மண்டலத்திற்கான 13 புதிய அரசு பஸ்கள், தர்மபுரி மண்டலத்திற்கான 17 புதிய அரசு பஸ்கள் என மொத்தம் 30 புதிய அரசு பஸ்களை கலெக்டர் ரோகிணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் மேலாண் இயக்குனர் அரவிந்த், துணை இயக்குனர்கள் ஜெயக்குமார் சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:- புதிய அரசு பஸ்கள் சேலத்தில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை வரையிலும், செந்தாரப்பட்டியில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை வரையிலும், எடப்பாடியில் இருந்து ஜலகண்டாபுரம் வழியாக பெங்களூரு வரையிலும், எடப்பாடியில் இருந்து கும்பகோணம் வரையிலும், சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக கோவை வரையிலும், கடத்தூரில் இருந்து திருப்பூர் வரையிலும், கோவையில் இருந்து திருவண்ணாமலை வரையிலும், சேலத்தில் இருந்து திருப்பூர் வரையிலும், நங்கவள்ளியில் இருந்து கோவை வரையிலும், சேலத்தில் இருந்து கரூர் வரையிலும், திருச்செங்கோட்டில் இருந்து சேலம் வழியாக பெங்களூரு வரையிலும் உள்ள வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story