தனியார் பள்ளி மாணவர்கள் 5 பேர் திடீர் மாயம் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம்


தனியார் பள்ளி மாணவர்கள் 5 பேர் திடீர் மாயம் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2018 10:15 PM GMT (Updated: 12 Oct 2018 7:42 PM GMT)

மதுரையில் தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்கள் திடீரென்று மாயமாகி விட்டனர். இதனால் அவர்களது பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருப்பரங்குன்றம்,

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டியை சேர்ந்த ஹரீஸ்(வயது 14), பழங்காநத்தத்தை சேர்ந்த பிரகதீஸ்வரன்(14), கலையரசன்(14), பசுமலை அண்ணாநகரை சேர்ந்த கோடீஸ்வரன்(14), பைக்காராவை சேர்ந்த கார்த்திகேயன்(14) ஆகியோர் மதுரை பசுமலையில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்கள் நேற்று முன்தினம் பள்ளி விட்டதும் வழக்கம்போல வீடு திரும்பவில்லை. அதனால் மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று பார்த்தனர். ஆனால் அங்கு இல்லை. உறவினர்களின் வீடுகளிலும் தேடினர். அவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து 5 மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்திடம் தங்களது மகன்கள் வீடு திரும்பவில்லை என்று முறையிட்டனர். அதற்கு பள்ளி நிர்வாகம் பள்ளி விட்டதும் அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் திருப்பரங்குன்றம் போலீசில் மாணவர்கள் மாயமானது குறித்து புகார் செய்யப்பட்டது. இதனையடுத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு முழுவதும் ரெயில்வே நிலையம், பஸ் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் மாணவர்களை தேடினர்.

இந்தநிலையில் நேற்று காலை 11 மணியளவில் 5 மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது மகன்கள் பற்றி எந்ததொரு தகவலும் தெரியவில்லை. அதில் பள்ளி வேனில் வரும் மாணவன் கலையரசனை பற்றி பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவில்லையே என கேட்டு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் திருப்பரங்குன்றம் போலீசார் விரைந்து வந்து பெற்றோர்களை சமரசம் செய்தனர். இந்த நிலையில் 5 மாணவர்களும் சென்னை மெரினா கடற்கரையில் சுற்றி திரிவதாக தகவல் வந்தது. இதனையடுத்து சென்னை போலீசாருக்கு திருப்பரங்குன்றம் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் திருப்பரங்குன்றம் போலீசாரும் உடனடியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

ஒரே பள்ளியில் படிக்கும் 5 மாணவர்கள் மாயமாக காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story